திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆணை வெளியிட்டுள்ளது.
இடைத்தேர்தல் பணிகளை நிறுத்தவும் மாநில தேர்தல் ஆணையருக்கு அறிவுறுத்தியுள்ள தேர்தல் ஆணையம் இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், தேர்தல் பணி அதிகாரிகளும் எடுத்த நடவடிக்கைகள் செல்லாது என்றும் அறிவித்துள்ளதாக அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, காலியாக உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி ஜனவரி 28-ஆம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை 31-ஆம் தேதியும் நடக்க இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது.
இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுகிறார். அ.ம.மு.க. வேட்பாளராக எஸ்.காமராஜ் அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆளும் அ.தி.மு.க. இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோராவை நேரில் சந்தித்து, கஜ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரில் இன்னும் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும், எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, அந்த மனுவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு அனுப்பிவைத்த தேர்தல் கமிஷன், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது
அதன்பேரில்அவர் இந்த தொகுதியில் தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை உள்ளதா என்பது குறித்து ஆலோசனை நடத்தி அறிக்கை வழங்குமாறு திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான நிர்மல்ராஜை கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி மாவட்ட ஆட்சியர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் கஜ புயல் பாதித்த பகுதிகளில் அடங்கும் திருவாரூரில் நிவாரணப் பணிகள் நடைபெற வேண்டியுள்ளதால் தற்போது இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று காங்கிரஸ், திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.