திட்டமிடப்பட்ட மாயை
சம்பந்தனின் தலைமைக்கு எதிரான கிளர்ச்சி மற்றும் சுமந்திரன் மீது காட்டப்படும் கடும் வெறுப்பு என்பன மற்றொரு திட்டமிட்ட மாயை ஆகும். தமிழ் நெற், புலிகள் மற்றும் புலிகள் சார்பு ஊடக ஊதுகுழல்கள் தமிழ் மக்கள் சம்பந்தன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக தங்கள் கரங்களை உயர்த்தி உள்ளார்கள் என்கிற ஒரு தோற்றத்தை உயர்த்திக்காட்ட கடும் முயற்சிகள் மேற்கொண்டாலும் நிலமை அப்படி இல்லை.
அதில் குறிப்பிடத் தக்க உண்மை என்னவென்றால் ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர், சுரேஸ் பிரேமச்சந்திரன், மாகாணசபை உறுப்பினர் எம்கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், கே. கஜதீபன், இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேட்ட உப தலைவர் பேராசிரியர்.
எஸ்கே. சிற்றம்பலம் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சி இளைஞரணி தலைவர் வி.எஸ். சிவகரன் போன்றவர்களைக் கொண்டுள்ள ரி.என்.ஏ கும்பல் ஒன்று இத்தகைய அரசியலில் ஈடுபட்டு வருகின்றது.
அதற்கு கூடுதல் உதவிகளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் தமிழ் சிவில் சமூக அமைப்பின் உயிர்நாடியாக விளங்கும் குமாரவடிவேல் குருபரனும் செய்து வருகிறார்கள்.
இந்த அதிருப்தியாளர்களில் அநேகமானவர்கள் வெளிநாட்டிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் மூலகங்களுடன் தொடர்புகளைப் பேணி வருகிறார்கள்.
இந்த அணியில் புதிதாக ஆட்சேர்க்கப்படும் சாத்தியம் உள்ளவராக கருதப்படுபவர் தனது சொந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாற்றிவரும் லட்சியவாதியான வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி. விக்னேஸ்வரன் ஆவார்.
தவறாக ஆலோசனை வழங்கிய இனப்படுகொலை தீர்மானத்துக்குப் பிறகு புலம் பெயர்ந்தவர்களின் சமீபகால பிரியத்துக்குரியவராக சிவி திகழ்கிறார்.
இந்த “எதிர்க்கும்” பிரிவினர்கள் எப்போதும் குற்றம் கண்டுபிடித்து ரி.என்.ஏயினை குறிப்பாக அதன் தலைமைத்துவத்தை சங்கடத்தில் ஆழ்த்துவதற்கு தக்க சமயம் எதுவென கவனித்து வருபவர்கள்.
சுமந்திரன் விசேடமாக தனிமைப் படுத்தப்பட்டுள்ளார், ஏனெனில் அவர் திறமையை அதிகம் வெளிக்காட்டும் ஒரு ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர்.
சுமந்திரன், தேசிய ரீதியாக தென்பகுதி அரசியல்வாதிகளாலும் மற்றும் அதேபோல சர்வதேச அதிகாரிகள் மற்றும் தலைவர்களாலும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒருவர்.
சுமந்திரன், சம்பந்தனின் மிகவும் நம்பிக்கைக்கு உரியவரும் மற்றும் திறமையான உதவியாளரும் ஆவார். சமீபகாலங்களில் தமிழ் அரசியல் விவகாரங்களில் சுமந்திரன் ஒரு ஆக்கபூர்வமான பணியினை ஆற்றி வருகிறார்.
சிறந்த இராஜதந்திரத்துடன் இணைந்த பொது வாதிடும் கலவையுடனான மதிப்புமிக்க சேவையை ரி.என்.ஏ தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் என்கிற வகையில் சுமந்திரன் ஆற்றி வருகிறார். பல சந்தர்ப்பங்களில் சம்பந்தனைப் பலவீனமடையச் செய்ய விரும்புபவர்கள் சுமந்திரனை அதற்கான இலக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள். சுமந்திரனுக்கு குழி தோண்டுவதன் மூலம் சம்பந்தனை அரசியல் ரீதியாக முடக்குவதற்கு முயலுகிறார்கள்.
சுமந்திரனின் அரசியல் பாத்திரம் பலராலும் பாராட்டிப் புகழப்பட்டு வருகிறது ஆனால் அது ரி.என்.ஏ மற்றும்; அதற்கு வெளியே உள்ள வட்டத்தில் உள்ள சிலருக்கு சீற்றத்தையும் உண்டாக்குகிறது. அவரது செயல்கள் கண் திருஷ்டியை உண்டாக்குகிறது.
இன்றுள்ள ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சுமந்திரன் ஒருவருக்கு மட்டுமே அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு புலிகள் உட்பட எந்த ஒரு போராளிக் குழுவுடனும் எதுவித தொடர்பும் இருக்கவில்லை.
யாழ்ப்பாணம் இணுவிலுள்ள மக்லேட் மருத்துவ மனையில் பிறந்திருந்தாலும், அவர் வளர்ந்தது கொழும்பில், படித்தது றோயல் கல்லூரியில்.
அரசியலில் இருந்து விலகியிருந்த சுமந்திரன், ரி.என்.ஏயில் இணையும்படி சம்பந்தன் அழைக்கும் வரை கொழும்பில் சட்டப் பயிற்சியை மேற்கொண்டிருந்தார்.
2010ல் அவர் சம்பந்தன் அவர்களால் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றார் ஓய்வு பெற்ற பேராசிரியர் சிற்றம்பலம் தன் பங்குக்கு அந்த பதவியை கோரியிருந்த போதும் அது அவருக்கு கிடைக்கவில்லை. அதுமுதல் சிற்றம்பலம் சம்பந்தன் – சுமந்திரன் இரட்டையரை மன்னிக்கவே இல்லை.
பின் கதவு பாராளுமன்ற உறுப்பினர்
சுமந்திரனின் எதிர்ப்பாளர்களான தமிழாகள் குறிப்பாக புலம் பெயர்ந்தவர்களிடையே உள்ளவர்கள் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் என்கிற கைபிடியை அவரை இழிவு படுத்தவும் மற்றும் சிறுமைப் படுத்தவும் பயன்படுத்தினார்கள்.
அவர் பாராளுமன்றத்துக்கு நேரடியாக தெரிவு செய்யப்படாததால், பாராளுமன்றத்துக்கு பின் கதவால் பிரவேசித்தவர் என்று சிலர் சுமந்திரனை வருணித்தார்கள். அதனால் அவரது புலம் பெயர்ந்த விமர்சகர்கள், சுமந்திரன் ஒரு இரண்டாம் தர பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவர் செய்யும் எதனையும் செய்வதற்கு அவருக்கு தார்மீக உரிமை கிடையாது என வாதிட்டார்கள்.
இந்த பின்கதவு பாராளுமன்ற உறுப்பினர் என்கிற வரைவிலக்கணத்துக்கு சட்டபூர்வமாகவோ, தார்மீக ரீதியாகவோ அல்லது நடைமுறை ரீதியாகவோ நிச்சயமாக எந்த ஆதாரமும் கிடையாது.
தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்துள்ள வாக்குகளின் அடிப்படையில் ஒதுக்கப்படுவது ஆகும்.
ஸ்ரீலங்கா தமிழ் அரசியலில் ஒரு விசித்திரமான அம்சமாக உள்ளது தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களை “பின்கதவு பாராளுமன்ற உறுப்பினர்கள்” என அழைப்பதாகும். சிங்கள, மலைநாட்டு தமிழ், அல்லது முஸ்லிம் அரசியல்வாதிகளில் இந்தப் பண்பு இருப்பதில்லை.
இந்த சமூகங்களில் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்களது போட்டியாளர்களோ அல்லது விமர்சகர்களோ பின்கதவு பாராளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிடுவதில்லை. ஸ்ரீலங்கா தமிழர்களிடம் மட்டுமே இந்த போக்கு காணப்படுகிறது.
1989ல் தற்போதைய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து இந்த பழக்கம் ஆரம்பமானது. இந்தப் பதத்துக்குப் பொறுப்பான மனிதர் முன்னாள் வடக்கு – கிழக்கு முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் ஆவார்.
அனுபவஸ்தரான தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக 1989ல் நியமிக்கப்பட்டபோது வரதராஜப்பெருமாள் அதை விமர்சித்ததோடு, அமிர்தலிங்கத்தின் வரவு பின்கதவு வழியாக மேற்கொள்ளப்பட்டது என்றும் அதைக் குறிப்பிட்டார்.
அன்றிலிருந்து பின்கதவு பாராளுமன்ற உறுப்பினர் என்கிற பதம் தமிழ் அரசியலில் உச்சரிக்கப்பட்டு வருகிறது. எல்.ரீ.ரீ.ஈயின் ஆசீர்வாதத்துடன் தேசியபட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம், எம்கே.ஈழவேந்தன், எஸ்.துரைரட்னசிங்கம் போன்றவர்களை பின்கதவு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று ஏளனமாக அழைக்கவில்லை.
கலாநிதி. நீலன் திருச்செல்வம் மற்றும் எம்ஏ.சுமந்திரன் போன்ற புலிகளின் மூலகங்களுக்கு சாதகமாக இல்லாத தமிழ் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இவ்வாறு விபரிக்கப் பட்டார்கள்.
தற்போதைய பாராளுமன்றத்தில், முன்னாள் பிரதமர் டிஎம்.ஜயரட்ன, பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டிஈடபிள்யு. குணசேகரா, எரான் விக்கிரமரட்ன, கலாநிதி. ஹர்சா டீ சில்வா, டிஎம்.சுவாமிநாதன், அனுர குமார திசாநாயக்க, எம்.ரி.ஹசன் அலி, முத்து சிவலிங்கம், போன்ற பல தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள்.
அவர்கள் யாரும் அவர்களின் விமர்சகர்களால் பின்கதவு பாராளுமன்ற உறுப்பினர் என அழைக்கப்படுவதில்லை. எனினும் சுமந்திரனின் விடயத்தில் மட்டும் அவரைத் தூற்றுபவர்கள் குறிப்பாக பூனைக் குடும்பத்துக்கு இணையான சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவரை அப்படி விபரிப்பதில் சுவை காண்கின்றனர்.
“கொழும்புத் தமிழன்”
அவரது கொழும்பு பின்னணியை குறிப்பிடும் மற்றொரு வகைத் தாக்குதலும் அவர்மீது தொடுக்கப்படுகிறது. சுமந்திரன் கொழும்புத் தமிழன் என அழைக்கப்படுகிறார். அதனால் அவர் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழர்கள் பற்றிப் பேசமுடியாது என்பது மற்றொரு வாதம்.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இந்தக் கோமாளிகள் இதே வாதத்தை கொழும்பிலே பிறந்து வளர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எதிராகப் பிரயோகிப்பதில்லை. சுமந்திரன் மட்டுமே கொழும்புத் தமிழர் என்று சாதாரணமாக தாக்கப்படுகிறார், ஏனென்றால் அவர் புலிகளின் மூலகங்கள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ அனுதாபிகளின் ஆசைகளுக்கும் மற்றும் வழிகளுக்கும் துணை போவதில்லை.
சமீப காலங்களிலேயே, சுமந்திரனுக்கு எதிரான உச்சபட்ச தனிப்பட்ட தாக்குதல்கள் தொடுக்கப் பட்டுள்ளன. ரி.என்.ஏ வட்டாரங்களைப் பொறுத்தவரை ஒருவேளை அந்த தாக்குதல்கள் கிளம்புவதற்கு ஒருவித உள்நோக்கம் இருக்கலாம்.
சுமந்திரனிற்கு எதிரான தாக்குதல், அவர் கொழும்பிலிருந்து தெரிவான ஒரு தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர், அத்தோடு அவரை அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு வேட்பாளராக நிறுத்த ரி.என்.ஏ மேலிடம் முடிவு செய்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் திருகோணமலை கிளைகள் சுமந்திரனை தங்கள் மாவட்டங்கள் சார்பாக போட்டியிட வேண்டும் எனக் கோரினாலும், ரி.என்.ஏ தலைவர் சம்பந்தன், சுமந்திரனின் வேர்கள் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்துதான் அவர் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றம் செல்லவேண்டும் என்கிற கருத்தில் உள்ளார்.
சுமந்திரனின் பெற்றோர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் அவரது தந்தை கரவெட்டியை சேர்ந்தவர், அது உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்குள் வருகிறது. அவரது தாய் குடத்தனையை சேர்ந்தவர், அது பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்குள் வருகிறது.
அவருடைய இரண்டு பாட்டன்மார்களும் ஆசிரியர்களாக இருந்தவர்கள் என்பதுடன் அந்தப் பிரதேசத்தில் நல்ல மதிப்பை பெற்றவர்கள். ரி.என்.ஏ வட்டாரத் தகவல்களின்படி வரும் தேர்தலில் சுமந்திரன் இந்த இரண்டு தேர்தல் தொகுதியையும் உள்ளடக்கிய வடமராட்சி பிரதேசத்தில் தனது கவனத்தை செலத்துவார் என்று தெரிகிறது.
இது அவரை நேரடியாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், மற்றும் சிவாஜிலிங்கம் போன்ற வடமராட்சி பிரதேச வளர்ப்புகளுடன் நேரடி வாக்கு மோதலை ஏற்படுத்தும்.
தவிரவும் யாழ்ப்பாணத்தில் உள்ள வேட்பாளர்களுக்கு அடுத்த தேர்தலில் மற்றொரு பிரச்சினையும் காத்திருக்கிறது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நிருவாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து ஏழாகக் குறைவடைந்துள்ளது.
இது அந்த மாவட்டத்திலிருந்த மக்கள் தொகை யுத்தம், இடப்பெயர்ச்சி, மற்றும் வெளிநாடுகளுக்கு குடிபெயர்வு காரணமாக குறைவடைந்ததால் ஏற்பட்டது. இந்த ஏழு ஆசனங்களில் நிச்சயமாக ஒன்று கிளிநொச்சிக்கு செல்லும் சாத்தியம் உள்ளது எனவே யாழ்ப்பாணத்துக்கான எண்ணிக்கை நடைமுறையில் ஆறு மட்டுமே.
தற்போதைய விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை காரணமாக ஐதேகவின் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தா ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு நல்ல வாய்ப்பு உண்டு.
இது ரி.என்.ஏ மற்றும் தமிழ் காங்கிரஸ் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியோருக்கு நான்கு ஆசனங்களை மட்டுமே விட்டுள்ளது. எனவே யாழ்ப்பாணத்தில் இந்த நான்கு ஆசனங்களுக்குமான போட்டி மிகக் கடுமையாக இருக்கும், தற்போது பதவியில் உள்ள பிரேமச்சந்திரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட தங்கள் பதவிகளை காப்பாற்றக்கூடிய விருப்பு வாக்குகள் கிடைப்பது சந்தேகம். இந்தச் சூழ்நிலையில்தான் சுமந்திரன் மீதான தாக்குதல்கள் வெடித்துள்ளன.
புரட்டஸ்ட்ரான் கிறீஸ்த்தவர்
மதியாபரணம் அபிரகாம் சுமந்திரன் மெதடிஸ்ட் பிரிவை சேர்ந்த புரட்டஸ்ட்றான் கிறீதஸ்தவர் ஆனபோதிலும், அவர் யாழ்ப்பாணத்தில் இந்து மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் பெரும் ஆதரவை பெறுவார் என்று ரி.என்.ஏ யின் உள்ளிருப்பவர்கள் எண்ணுகிறார்கள்.
அற்பமான சிறபான்மையினராக இருந்தபோதிலும் வடக்கு மற்றும் கிழக்கில் இந்து மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் புரட்டஸ்ட்றான் கிறீத்தவர்கள் ஆசனங்களை வென்றதுக்கு முன்னுதாரணங்கள் உள்ளன.
அதில் மிகவும் பிரபலமானது தமிழரசுக்கட்சியின் துணை ஸ்தாபகரும் மற்றும் தலைவருமான சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் வெற்றியே, அவர் தொடர்ச்சியாக 1947, 1956, 1960, 1965, 1970, மற்றும் 1975 வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கேசன்துறை தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.
மட்டக்களப்பில் வெற்றி பெற்ற ராஜன் செல்வநாயகம் (1970), மற்றும் யாழ்ப்பாணத்தில் வெற்றிபெற்ற அல்பிரட் துரையப்பா (1960) ஆகியோரும் புரட்டஸ்ட்றான் கிறீத்தவர்களே, துரையப்பா பின்னாளில் மதம்மாறி ஒரு பிரம்மஞானியாக இந்து கோவில்களிலும் மற்றும் புத்த விகாரைகளிலும் வழிபாடு நடத்தலானார்.
சமீப காலங்களில் வட மாகாணசபை தேர்தல்களில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து வெற்றியீட்டிய ரி.குருகுலராஜாவும் ஒரு புரட்டஸ்ட்றான் கிறீத்தவரே. தற்போது மாகாணக் கல்வி அமைச்சராக உள்ள குருகுலராஜா, பிரபல மதகுருவான வண. ஏ.சி.தம்பையாவின் மகனாவார். அவர் பரந்தன் அருகேயுள்ள முரசுமோட்டையில் மரபுவழியல்லாத கிறீத்தவ நிறுவனமான “நவஜீவனம்” என்கிற நிறுவனத்தை அமைத்துள்ளார்.
இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் கிறீத்தவர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான பிரதான காரணம், ஸ்ரீலங்காவிலுள்ள தமிழ் அரசியல் மதச்சார்பற்ற தன்மையாக உள்ளதுதான்.
தமிழ் தாய் வணக்கம் பாடுவது மத வேறுபாடுகளை கடந்து தமிழ் ஐக்கியத்தை அடையாளமாகக் கொண்டே. தீவில் தமிழ் சமத்துவத்துக்கான அரசியல் போராட்டம் நடைபெற்றது இன மொழி வரிசையில் மட்டுமே.
1956, 58,77;,81, மற்றும் 83ம் ஆண்டுகளில் காடையர் கும்பல்கள் தமிழர்களைத் தாக்கியபோது பாதிக்கப்பட்டது தமிழர்களாக இருந்த அனைவரும்தான், அவர்கள் இந்துக்களா அல்லது கிறீத்தவர்களா என வேறுபடுத்தப் படவில்லை. குண்டுமாரிகளும் ஷெல் மாரிகளும் பொழிந்தது தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களில்தான் அவை இந்துக்களையும் மற்றும் கிறீத்தவர்களையும் வேறுபடுத்தித் தாக்கவில்லை.
தமிழ் சமூகத்தில் கிறீத்தவர்கள் அரசியல் தலைவர்களாக மாறிய நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கதும் கேள்விக்கு இடமானதாகவும் இருந்தது. இது குறிப்பாக இரண்டு தசாப்தங்களாக வன்முறையற்ற அரசியல் எதிர்ப்பை வழிநடத்தி அதன்மூலம் தந்தை செல்வா எனப் பெயர் பெற்ற எஸ்ஜேவி. செல்வநாயகத்தின் விடயத்தில் நடைபெற்றது.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா ஒருமுறை செல்வநாயகத்துக்கு எழுதிய கடிதத்தில் கிறிஸ்தவராக உள்ள அவருக்கு வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் சார்பாகப் பேசுவதற்கு என்ன உரிமை உள்ளது எனக் கேட்டிருந்தார்.
அதற்கு செல்வநாயகம் வெகு நாசூக்காக பதிலளித்திருந்தார் “அந்தப் பெருமை தமிழ் மக்களுக்குத்தான் உரியது, தங்களுக்கு தலைமை தாங்குவதற்காக அவர்களின் தலைவர்களை மதம் மாறும்படி அவர்கள் அவசியப்படவில்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
‘மதம் மாறவேண்டியது’ சிங்கள தலைவர்களான எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா மற்றும் ஜே.ஆர் ஜெயவர்தனா போன்றவர்களுக்கு ஒரு மறைமுக தடையாக இருந்தது, அவர்கள் கிறீஸ்தவர்களாகப் பிறந்து ஞ}னஸ்நானம் பெற்றவர்கள் பின்னாளில் பௌத்தர்களானார்கள்.
(தொடரும்)
– டி.பி.எஸ்.ஜெயராஜ்