23 கொலைகள்,20 இற்கு மேற்பட்ட கொள்ளைகள், எண்ணிலடங்காத கப்பம் கோரல்கள் என தொடர்ந்த பாலங்கட ஹீனாவின் சரித்திரம் கடந்த 11 ஆம் திகதி இரத்தினபுரி, மஹவலவத்த காட்டில் முடிவுக்கு வந்தது.
தெற்கு பாதாள உலகக் குழுவின் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் ‘பாலங்கட ஹீனா’ என அழைக்கப்படும் அரும கமகே சுகத் சாமிந்தவின் முடிவு இந்த மாதம் குற்றவியல் தொடர்பில் மற்றுமொரு பதிவினை மீட்ட வைத்துள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண
அதாவது ஆயுதம் காட்டுவதாக பொலிஸாரை அந்த காட்டுக்கு அழைத்துச் சென்று பொலிஸார் மீது கைக் குண்டொன்றை வீச முற்பட்ட போது தற்காப்பு நிமித்தம் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் பரிசோதகர் அமரசிறி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாலங்கட ஹீனா உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதன் படியே 1999 ஆம் ஆண்டு முதல் பாரிய குற்றங்களுடன் தொடர்புபட்டு 2014 ஆம் ஆண்டு வரை அவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்த ஒரு பாதாள உலகப் புள்ளியின் கதை முடிவுக்கு வருகிறது.
ஆம், கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மலன்கம பிரதேசத்தில் பிரபல இரத்தினக் கல் வியாபாரியான சுமித் குணசேகரவை சுட்டுக்கொன்றுவிட்டு 80 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக்கல், 40 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றமை தொடர்பான சம்பவமே பாலங்கட ஹீனாவுக்கு மரணத்தை அழைத்து வந்தது எனலாம்.
தெற்கு பாதாள உலகின் பிரபல தலைவராக கருதப்பட்ட ஆமி ஜினேவின் கையாளாக குற்றவியல் உலகுக்குள் தனது 18 ஆவது வயதில் காலடி எடுத்து வைத்த பாலங்கட ஹீனா தனது 32 ஆவது வயது வரை அந்த உலகிலேயே வாழ்ந்ததுடன் மரணத்தையும் சந்திக்க நேர்ந்தது.
கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி தனது மனைவி, பிள்ளையுடன் காரில் இரத்தினபுரி நகரிலிருந்து தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த மாணிக்கக் கல் வியாபாரியான சுமித் குணசேகர, தனது வீட்டை அடைந்த போது பிரதான நுழை வாயிலை திறக்க காரில் இருந்து இறங்கிய சமயம் பின் தொடர்ந்துவந்த துப்பாக்கி தாரிகளால் கொலை செய்யப்பட்டார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண
அத்துடன் அவர் வசம் இருந்த 80 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கல், 40 ஆயிரம் ரூபா பெறுமதியான பணமும் கொள்ளையிடப்பட்டதாக சுமித் குணசேகரவின் மனைவியினால் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விசாரணைகளை தொடர்ந்த இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் பரிசோதகர் அமரசிறி தலைமையிலான பொலிஸ் குழு இந்த கொலை, கொள்ளையின் பின்னணியில் பாலங்கட ஹீனா உள்ளதை கண்டுபிடித்தனர்.
எனினும்,பொலிஸாரிடமிருந்து தலைமறைவாகியிருந்ததால் பாலங்கட ஹீனாவை கைது செய்வதில் இரத்தினபுரி பொலிஸார் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இவ்வாறானதொரு நிலையிலேயே பாலங்கட ஹீனாவை கைது செய்யும் பொறுப்பு பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனினால் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நிர்வாகியாக செயற்படும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரச் சந்திர ரணவனவிடம் பாலங்கட ஹீனாவை கைது செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இதனை அடுத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரச் சத்திர ரணவனவின் ஆலோசனைக்கமைய விசேட அதிரடிப்படையின் விசேட குழு பாலங்கட ஹீனாவை கைது செய்யும் நோக்கில் அவரை தேடும் படலத்தை தொடங்கியது.
மாணிக்கக் கல் வியாபாரியான சுமித் குணசேகரவின் கொலை இடம்பெற்று ஒரு மாதம் நிறைவடைய நெருங்கிய நிலையில் பாலங்கட ஹீன தொடர்பான தகவல் ஒன்று பொலிஸ் விசேட அதிரடிப்படை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்தது.
இதனை அடுத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத்சந்திர ரணவனவின் ஆலோசனைக்கு அமைய செயற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஹிக்கடுவை, தொட்டகமுவை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பாலங்கட ஹீனாவை கைது செய்தனர்.
இந்த கைதானது கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்றது. பாலங்கட ஹீனாவுடன் சேர்த்து அவரது கையாள் என கருதப்படும் 37 வயதான நபர்ஒருவரையும் பாலங்கட ஹீனாவுக்கும் அவரது உதவியாளருக்கும் தங்குமிடம் அளித்த 35 வயதான பெண் ஒருவரையும் இதன் போது அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
இதனை அடுத்து சுமித் குணசேகரவின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக பாலங்கட ஹீனா அதிரடிப்படையினரால் 10 ஆம் திகதி இரவோடிரவாக இரத்தினபுரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதிரடிப்படையினரிடமிருந்து பாலங்கட ஹீனாவை பொறுப்பேற்ற இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி அமரசிறி, தனது குழுவினருடன் இணைந்து பாலங்கட ஹீனாவை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார். இதன் போதே பாலங்கட ஹீனா தனது உயிருக்கு உலை வைக்கும் அந்த சம்பவத்தை திட்டமிட்டுள்ளார்.
மாணிக்கக் கல் வியாபாரியின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கியையும் மேலும் பல ஆயுதங்களையும் இரத்தினபுரி,மஹவலவத்த காட்டில் மறைத்து வைத்துள்ளதாக பாலங்கட ஹீனா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அந்த வாக்கு மூலத்தை பதிவு செய்துகொண்ட பொலிஸார் கடந்த 11 ஆம் திகதி, அதாவது பாலங்கட ஹீனா கைது செய்யப்பட்ட மறுதினம் காலையிலேயே ஹீனாவையும் அழைத்துக்கொண்டு மஹவலவத்த காட்டுக்கு ஆயுதங்களை மீட்க சென்றுள்ளனர்.
பொலிஸ் பரிசோதகர் அமரசிறி தலைமையிலான குழுவினரே சந்தேக நபரை அழைத்துச் சென்றுள்ளனர். இதன் போது காட்டின் ஒரு பகுதியை அடைந்தபோது சந்தேக நபரான பாலங்கட ஹீனா அங்கு மறைத்து வைத்திருந்த கைக் குண்டொன்றை எடுத்து பொலிஸார் மீது தாக்க முற்பட்டுள்ளார்.
இதனை அடுத்து பொலிஸ் பரிசோதகர் அமரசிறி தற்காப்பு நிமித்தம் பாலங்கட ஹீனா மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள, காயமடைந்த ஹீனா இரத்தினபுரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். எனினும் அங்கு கொண்டு செல்லப்படும்போதே பாலங்கட ஹீனா என்ற பாதாள உலகின் இருண்ட சரித்திரம் முடிவுக்கு வந்திருந்தது.
பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்ட பாலங்கட ஹீனா என அறியப்படும் அரும கமகே சுகத் சாமிந்த முல்கிரிகல பிரதேச பாடசாலை ஒன்றில் சாதாரண தரம் வரை கல்வி பயின்றவர்.
எனினும் பாலங்கட ஹீனாவின் மூத்த சகோதரிகளில் ஒருவரான பிரதீபா நந்தனீ எனப்படுபவர் பிரதேசத்தின் போக்கிரி ஒருவரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் பட்ட சம்பவத்தை அடுத்து அது தொடர்பில் தட்டிக் கேட்கச் சென்றே அவர் குற்றவியல் உலகுக்குள் புகுந்தவர் என கூறப்படுகிறது.
‘கழுவா’ எனப்படும் அந்த போக்கிரி ஊரின் பெரிய சண்டியனாகவும் விளங்கியுள்ளான்.
இதனிடையே துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சகோதரிக்கு ஆண் குழந்தை ஒன்றும் கிடைத்துள்ளது. எனினும் ‘கழுவா’ இது தொடர்பில் கணக்கிலெடுக்கவில்லை.
பொலிஸாரின் நடவடிக்கையும் அப்போது பெரிய அளவில் வெற்றி அளிக்காததால் களத்தில் தானே இறங்கி ‘கழுவாவுக்கு எதிராக போராடுவது என ஹீனா தீர்மானித்துள்ளார்.
இதற்காக இராணுவத்திலிருந்து தப்பி வந்துள்ள தனது உறவு முறைக்காரரான ஆமி ஜினே என்ற தெற்கின் முதல் நிலை பாதாள உலகக் குழு தலைவருடன் சேர்ந்து பாலங்கட ஹீனா செயற்படலாயினார்.
பொலிஸாருக்கு எதிராகவே மனித உரிமை தொடர்பில் முறைப்பாடளித்த குற்றவாளி என்ற நிலையில் ஆமி ஜினேவை தெரியாதவர்கள் இருக்க முடியாது.
எது எவ்வாறாயினும் கழுவாவை ஆமிஜினேவுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய பாலங்கட ஹீனா குற்றவியல் உலகில் தொடர்ந்தும் சஞ்சரிக்கலானார். அன்று முதல் பல்வேறு குற்றச் செயல்களூடாக பலரது உயிரை பறித்த பாலங்கட ஹீனா, வீரகெட்டிய பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்த ஆமி ஜினேவின் இடத்தை நிரப்பும் விதமாகவும் கொலைக்கு பழிவாங்கும் விதமாகவும் குற்றவியல் வாழ்வை தொடரலானான்.
இதன் தொடராக பல உயிர்களை பறித்த பாலங்கட ஹீனா, கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந் நிலையிலேயே பாலங்கட ஹீனா மாணிக்கக் கல் வியாபாரியை கொலை செய்து தனக்கான முடிவினை தேடிக்கொண்டான்.
‘ஆயுதம் எடுத்தவனுக்கு ஆயுதத்தாலேயே சாவு ‘ என்பார்கள். பாலங்கட ஹீனா விடயத்திலும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது.
சட்டம் தன் கடமையை செய்யவில்லை எனக் கூறி ஆயுதம் ஏந்தும் ஒவ்வொருவரின் நிலைமையும் பாலங்கட ஹீனாவின் முடிவை ஒத்ததாகவே இருக்கும்.
எம்.எப்.எம்.பஸீர்