1991-ம் ஆண்டு தமிழகத்தில் இருந்த தி.மு.க ஆட்சியை டெல்லி கலைத்தது. கருணாநிதியின் தலைமையில், தமிழகத்தில் அன்று அமைந்திருந்தது பலவீனமான ‘மைனாரிட்டி’ அரசாங்கம் அல்ல. அசுர பலம் கொண்ட ‘மெஜாரிட்டி’ அரசாங்கம். அந்த அரசாங்கம் நடத்திய நிர்வாகத்தில் மிகப்பெரிய ஓட்டைகள் எதுவும் விழவில்லை; சட்டம் ஒழுங்கு மோசமாகக் கெட்டுப்போய்விடவில்லை.
தமிழகத்தில் அந்த அரசுக்கு முன்பும் பின்பும் நடைபெற்ற அரசுகளோடு ஒப்பிடும்போது, 1990-ல் நடைபெற்ற கருணாநிதியின் அரசு நன்றாகத்தான் நடந்தது. ஆனாலும்கூட, வம்படியாக காரணங்களைக் கண்டுபிடித்து அதை டிஸ்மிஸ் செய்தது டெல்லி. அதற்கு இரண்டே காரணங்கள் மட்டுமே இருந்தன.
முதல் காரணம், ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா கொடுத்த நிர்பந்தம்; இரண்டாவது காரணம், பிரதமர் சந்திரசேகருக்கு ராஜீவ் காந்தி கொடுத்த நிர்பந்தம். இப்படி, தமிழகத்தின் முதல்வர் பதவியை அடையத் துடித்த ஜெயலலிதாவும், இந்தியப் பிரதமர் பதவியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த ராஜீவ் காந்தியும் கூட்டுச் சேர்ந்து கருணாநிதியின் ஆட்சியைக் காவு வாங்கினர்.
நடராசனை நாடு கடத்திய ஜெயலலிதா!
தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டதும் ஜெயலலிதா தமிழக அரசியலில் வேகமெடுத்து ஓடத் தொடங்கினார். நடராசன் நிதானமாக வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். சசிகலா எல்லாவற்றுக்கும் சாட்சியாக ஜெயலலிதாவின் நிழலாக வலம்வந்தார்.
இந்தக் கூட்டணி நடராசன்அந்தக் காலகட்டத்தில் மூன்று முக்கியத் திட்டங்களைத் தீட்டியது. அதன்படி கட்சியில், “ ‘எங்கும் ஜெயலலிதா… எதிலும் ஜெயலலிதா…’ என்ற ஒற்றைச் சிந்தனை மட்டுமே நிலைக்க வேண்டும், ஜானகி அணியில் இருந்து வந்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாக களையெடுக்க வேண்டும், அவர்களையும் அவர்களுடைய ஆதரவாளர்களையும் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க வேண்டும்” என்று தீர்மானமான வேலைகளைத் தொடங்கினார்.
ஆனால், அவற்றைச் நடைமுறைப்படுத்தும்போது ஜெயலலிதாவுக்குத் துணையாக நடராசன் இல்லை. அவர் இருந்தால் திட்டத்தின் முதல் நோக்கமான, ‘எங்கும் ஜெயலலிதா… எதிலும் ஜெயலலிதா…’ என்பதே நிறைவேறாது; மீண்டும் எல்லா இடத்திலும் நடராசனே இருப்பார் என்பதால் அவரைக் கொஞ்சம் ஒதுங்கி இருக்கச் சொன்னார் ஜெயலலிதா.
‘தனக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை’ என்பதைப்போல் ஒதுங்கிக் கொண்டார் நடராசன். ஜெயலலிதா-நடராசன் சேர்ந்து நடத்திய இந்த நாடகத்துக்கு வேறோரு காரணமும் இருந்தது.
‘நடராசனை கொஞ்சம் ஒதுக்கிவைக்கச் சொல்லி ஜெயலலிதாவுக்கு டெல்லி காங்கிரஸ் தலைமையும் ஓலை அனுப்பிக் கொண்டே இருந்தது. டெல்லியை அப்படிச் சொல்லச் சொல்லி தொல்லை கொடுத்தவர்கள், தமிழ்நாடு காங்கிரஸில் இருந்த சில தலைவர்கள்.
அதற்கு அவர்கள் ஏகமொத்தமாக சொன்ன காரணம், “நடராசன் பக்கத்தில் இருந்தால் ஜெயலலிதாவின் கவனத்தை எந்த நேரத்திலும் திசை திருப்பிவிடுவார்; கூட்டணிப் பேச்சு வார்த்தைகளுக்கு அது மிகப்பெரிய இடையூறாக அமையும்” என்பதே.
அதன் அடிப்படையில் “நடராசனோடு கட்சிக்காரர்கள் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்” என்று அடிக்கடி ஜெயலலிதா அறிவுறுத்திக் கொண்டே இருந்தார். அதனால், ஜெயலலிதாவே அவருடைய சொந்த செலவில் நடராசனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்.
தமிழகத்தில் இருந்து தலைமறைவான நடராசன் சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து அமெரிக்கா சென்று சில நாட்கள் தங்கி இருந்தார். தமிழகத்தில் இருந்த ஜெயலலிதா ஒவ்வொரு திட்டமாக நடைமுறைப்படுத்தினார்.
எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் அதற்கு முதல் பலியாகக் கொடுக்கப்பட்டன. கட்சியில் இருக்கும் எம்.ஜி.ஆர் இளைஞரணி மட்டும் போதும் என்றார். அதுவரை எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களை முன்னெடுத்து நடத்தியவர்கள் கட்சியில் காலாவதியாகத் தொடங்கினார்கள்.
எங்கும் ஜெயலலிதா… எதிலும் ஜெயலலிதா..
அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நிர்வாகிகள் கூட்டம் கூடியது. ஜெயலலிதாவுக்கு வலதுபுறம் ஒன்பது உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்; இடதுபுறம் ஒன்பது உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.
ஆனால், யாரும் பேசவில்லை. ஜெயலலிதா மட்டுமே பேசினார். “வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் யாரும் சீட் கேட்கக்கூடாது. அவர்கள் தொகுதியில் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும். எந்தத் தொகுதிக்கு யார் வேட்பாளர்கள் என்று தலைமைக் கழகம் அறிவிக்கிறதோ… அவர்கள்தான் உங்களுக்கும் வேட்பாளர்கள்.
அவர்களை எதிர்த்து கழகத்தினரே வேலை செய்வதோ… மனுத்தாக்கல் செய்வதோ கூடாது. அதுபோன்ற துரோகச் செயல்களில் ஈடுபட்டால், கூண்டோடு டிஸ்மிஸ் செய்யப்படுவீர்கள்.
இப்போதே சிலர் தலைக்கனம் பிடித்து அலைகிறார்கள். அவர்கள் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். அதிகாரிகளை எல்லாம் இப்போதே மிரட்டுகிறார்கள். ஏதோ ஆட்சிக்கு இப்போதே வந்துவிட்டோம் என்ற மமதையில் அப்படி நடந்து கொள்கிறார்கள்.
நீங்கள் என்ன செய்தாலும் உடனே நிறுத்த வேண்டும்… அதை மீறி எனக்குத் தெரியாமல் எதுவும் செய்யலாம் என யாரும் நினைக்க வேண்டாம். யார் என்ன செய்தாலும் எனக்கு உடனடியாக தகவல் வந்துவிடும். அவர்கள் கழகத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்.
வேட்பு மனு விற்பனை மூலம் ஒரு கோடி ரூபாய் நாம் எட்ட முடியவில்லை. அதனால், தொகுதியில் நிதி வசூல் செய்ய வேண்டும். அதிகம் எல்லாம் இல்லை. தொகுதிக்கு ஒரு லட்சம் தான். இது மாவட்டச் செயலாளர்களின் பொறுப்பு.
இது கழகம் வைத்திருக்கும் அக்னீப் பரிட்சை” என்றார். வேட்பாளர் தேர்வும் சூடுபிடித்தது. ஜெயலலிதாவே தலைமைக் கழகத்துக்கு நேரில் வந்து வேட்பாளர் தேர்வை நடத்தினார்.
வழக்கம்போல, “என்ன ஜாதி, நீங்கள் போட்டியிடும் தொகுதியில் எந்த ஜாதிக்காரர்கள் அதிகம் உள்ளனர், எவ்வளவு செலவு செய்வீர்கள் என்ற கேள்விகளுடன் 1989-க்குப் பிறகு நீங்கள் கழகத்துக்கு செய்த பணி என்ன? என்றும் கேட்டுவைத்தார்.
இப்படி கட்சிக்குள், ‘எங்கும் ஜெயலலிதா… எதிலும் ஜெயலலிதா…’ என்ற சிந்தனை ஆழமாக நிறுவப்பட்டது.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சியைக் கலைத்த சந்திரசேகரின் ஆட்சியை மத்தியில் ராஜீவ் காந்தி கலைத்தார்.
1991 மார்ச் 6-ம் தேதி, சந்திரசேகர் அரசாங்கத்துக்கு கொடுத்த ஆதரவை ராஜீவ் காந்தி வாபஸ் வாங்கினார். அதில் மத்தியில் இருந்த அந்த அரசாங்கம் கவிழ்ந்தது.
இதையடுத்து வெளிநாட்டில் இருந்த நடராசனுக்கு அதற்குமேல் அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. அவசரமாக நாடு வேட்பாளர்கள் பட்டியலுடன் வரும் ஜெயலலலிதா திரும்பினார். ஆனால், போயஸ் கார்டன் பக்கமே அவர் வரவில்லை.
தலைமைக் கழகத்தின் திசையைக்கூட திரும்பிப் பார்க்கவில்லை. எங்கோ இருந்துகொண்டு காய்களை நகர்த்தும் வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தார். எப்படியோ அவரைக் கண்டுபிடித்து போய் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்ட சிலரையும், “செங்கோட்டையனிடம் போய்க் கேளுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.
அதற்கு முன்பே நடராசன் தனது அரசாங்க வேலையை ராஜினாமா செய்திருந்தார். அதை அப்போது இருந்த தி.மு.க அரசு ஏற்காமல் இருந்தது. ஆனால், அது டிஸ்மிஸ் ஆனதும் நடராசனின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. டெல்லியில் இருந்த சுப்பிரமணியசாமியைப் பிடித்து, நடராசனின் ராஜினாமாவை காதும் காதும் வைத்ததுபோல் முடித்துக் கொடுத்தார் ஜெயலலிதா. ஏனென்றால், நடராசனுக்கு கட்சிக்குள் நிழல் வேலைகள் காத்திருந்தன.
அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிந்தன. எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களை ஏற்கெனவே கலைக்கச் சொல்லியிருந்த ஜெயலலிதா, அந்த மன்றங்களை முன்னின்று நடத்தியவர்களைத் தேர்தலில் முழுமையாக ஓரம் கட்டினார்.
செங்கோட்டையனும் மதுசூதனனும் மட்டுமே அதில் தப்பிப் பிழைத்தனர். ஜானகி அணியில் விசுவாசமாக இருந்து பின் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றுக் கொண்ட அரசியல் ஜாம்பவான், ஆர்.எம்.வீரப்பனுக்கே சீட் இல்லை என்று மறுத்துவிட்டார் ஜெயலலிதா.
வேடசந்தூர் வி.பி.தணிகாசலம், தாம்பரம் எல்ல.ராஜமாணிக்கம் உள்பட சைதை துரைசாமிக்கும் நோ சீட். இதைச் செய்ததன் மூலம் ஜானகி அணியில் இருந்து வந்தவர்களை எல்லாம் முழுமையாக ஓரம் கட்டினார் ஜெயலலிதா.
1991 தேர்தலில் அ.தி.மு.கவில் போட்டியிட சீட் வாங்கியவர்கள் எல்லாம் ஜெயலலிதா, சசிகலா-நடராசனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் மட்டுமே. ஆனால், நடராசனின் அரசியல் ஆசானாக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் பெயர் ஆரம்பத்தில் அந்தப் பட்டியலில் விட்டுப்போனது.
ஆனால், தன் அரசியல் ஆசானை நடராசன் விட்டுவிடவில்லை. ‘எஸ்.டி.எஸ் இல்லையென்றால், தஞ்சையில் கட்சி தேர்தலில் தோற்றுவிடும்’ என்பதை விளக்கி நூற்றுக்கணக்கில் போயஸ் கார்டனுக்கு கடிதங்கள் வரவழைத்தார். சசிகலா அவற்றை ஜெயலலிதாவின் பார்வைக்குக் கவனமாகக் கொண்டு சென்றார்.
அதையடுத்து, எஸ்.டி.சோமசுந்தரத்தை தொலைபேசியில் அழைத்த ஜெயலலிதா “உங்களுக்கு சீட் உண்டு… போட்டியிடுங்கள்’‘ என்றார். எஸ்.டி.சோமசுந்தரம் நெகிழ்ந்து போனார்.
காலில் விழும் கலாசாரம் ஆரம்பம்!
ஜெயலலிதாவின் காலில் விழும் வேட்பாளர்வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் சென்னை மெரீனாவில் கூடியது. ராஜீவ் காந்தி வழக்கம்போல தனி விமானத்தில் வந்தார்.
அந்தக் கூட்டத்துக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத ஆர்.எம்.வீரப்பன் வரவில்லை. நாவலர் தலைமையுரை ஆற்றினார். அந்த மேடையில்தான் ஜெயலலிதா காலில் விழும் கலாசாரம் அப்பட்டமாகத் தொடங்கியது.
சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஜெயலலிதா அறிமுகம் செய்தபோது, கே.ஏ.கே, மயிலை ரங்கராஜன், தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஸ்ரீதர் தவிர மற்ற அனைவரும் ஜெயலலிதாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள்.
அதைப் பார்த்த ராஜீவ் காந்தியே கொஞ்சம் அசந்து போனார். அந்த மேடையில் பேசிய ஜெயலலிதா அனுதாப அஸ்திரத்தை முழு ஆவேசத்துடன் எய்தார்.
கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, “என்னை ஒரு பெண் என்று பார்க்காமல் கருணாநிதி சட்டமன்றத்தில் குண்டர்களை வைத்துத் தாக்கினார். மீனம்பாக்கத்தில் என்னை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி செய்தார்.
அந்த விபத்தில் சிக்கிய நான் குணமடைந்து வருவதற்குள் அந்த லாரி டிரைவரை அபராதம் மட்டும் விதித்து விடுதலை செய்து கருணாநிதி வழக்கை முடித்துவிட்டார்.
இதுபோன்ற கருணாநிதியின் அராஜகத்தைப் பார்த்துதான் அவரை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் புறக்கணித்தார்கள். அவருடைய ஆட்சியும் பறிபோனது. ஆட்சியை இழந்த கருணாநிதி, இப்போது மீண்டும் உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்.
அவரைப் புறக்கணிப்பீர்களா… புறக்கணிப்பீர்களா?” என்று முழங்கினார். கடற்கரையில் கூடியிருந்த கூட்டம், ‘புறக்கணிப்போம்… புறக்கணிப்போம்’ என்று கோரஸாகத் திரும்பச் சொன்னது.
சொன்னபடி அதைச் செய்தும் காண்பித்தது. அதன் எதிர் வினையை அடுத்து வந்த 5 ஆண்டுகளுக்கும் தமிழகம் அனுபவித்தது.
கதை தொடரும்…
தமிழக அரசு டிஸ்மிஸ்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம்- 41