அறிமுகமாகி 10 வருடங்களுக்கு மேலாக நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவின் சம்பளம் இந்திய ரூ.4 கோடியாக அதிகரித்துள்ளமை கோலிவூட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் நயன்தாரா மார்க்கெட் முன்னிலையில் உள்ளதுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கியபோது திரைப்படங்கள் குறையும் என்று சிலர் சொன்னதை நயன் பொய்யாக்கினார்.
அதிக திரைப்படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நடிகைகளாலும் கூட நயன்தாராவை எட்டிப்பிடிக்க முடியவில்லை.
அறிமுகமான புதிதில் நயன்தாராவின் சம்பளம் இந்திய ரூ.40 மற்றும் 50 இலட்சங்களாக இருந்தன. சில திரைப்படங்களிலேயே அது இந்திய ரூ.1 கோடியானது. அதன்பிறகு ரஜினிகாந்த், விஜய், அஜீத், சூர்யா, ஆர்யா, தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.
அண்மையில்; அவர் நடித்து திரைக்கு வந்த திரைப்படங்கள் வசூலை வாரிக் குவித்தன. „மாயா, நானும் ரௌடிதான் தனி ஒருவன், இது நம்ம ஆளு… திரைப்படங்களும் நன்றாக ஓடியதையடுத்து அவரது சம்பளம் இந்திய ரூ.3 கோடியை எட்டியது.
தற்போது இருமுகன், காஷ்மோரா, திருநாள் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது நயன்தாரா தனது சம்பளத்தை இந்திய ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மற்ற நடிகைகள் வாங்கும் அதிக பட்ச சம்பளம் இந்திய ரூ.2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.