நான்காவது தடவையாக போலி திருமணம் செய்ய முயன்ற மணப்பெண் ஒருவரை திருமணம் நடைபெறுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் பொலிஸார் கைது செய்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
வட லண்டனில் ரொடென்ஹாம் பிரதேசத்தைச் சேர்ந்த ராகுயால் நெடோபுர்ரடோ டி அன்ட்ரேட் (22 வயது) என்ற மேற்படி பெண் இதற்கு முன் சட்டவிரோத குடியேற்ற வாசிகளான 3 நைஜீரிய பிரஜைகளிடம் பணத்தை பெற்று பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கு உதவும் வகையில் அவர்களை போலித்திருமணம் செய்திருந்தார்.
இந்நிலையில் போர்த்துக்கேய பிரஜையான டி அன்ட்ரேட் அதே திருமண உடையில் பிறிதொரு நைஜீரிய பிரஜையுடன் (32 வயது) திருமண பதிவு அலுவலகத்திற்கு வந்த போது அந்த அலுவலக உத்தியோத்தர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த உத்தியோகத்தர்கள் குடிவரவு அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கவும் அந்த அதிகாரிகள் எல்லை பொலிஸார் சகிதம் குறிப்பிட்ட திருமண பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதன்போது டி அன்ட்ரேட் ஏற்கனவே நைஜீரியாவை சேர்ந்த 3 சட்டவிரோத குடியேற்ற வாசிகளிடம் பணத்தை பெற்று அவர்களை போலியாக திருமணம் செய்த பின் விவாகரத்து பெற்றமை அம்பலத்துக்கு வந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை ஹரோ கிறவுண் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவருக்கு போலியாக பலதார திருமணம் செய்தமை தொடர்பில் இரு வருட சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
அதேசமயம் மணமகன் நாடு கடத்தப்பட்டுள்ளார். இங்கிலாந்திலும் வேர்ஸிலும் வருடாந்தம் இடம்பெறும் திருமணங்களில் 15,000 திருமணங்கள் போலியானவை என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.