யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திங்கட்கிழமை அதிகாலை புகுந்த நபர்கள் 45 பவுண் நகை, 30 ஆயிரம் ரூபா பணம் என்பனவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
குறித்த வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் இடைவிடாது குரைத்துக் கொண்டிருந்ததையடுத்து வீட்டின் உரிமையாளர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபோது, வாயில்கதவு (கேட்) திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
அதனையடுத்து வீட்டின் முன் கதவைத் திறந்து வெளியே சென்று கேற்றை பூட்டுவதற்கு முற்பட்ட போது, அவ்விடத்தில் மறைந்திருந்த கொள்ளையர்கள் அவரை ஆயுதமுனையில் மடக்கிப் பிடித்துள்ளனர்.
ஐவரைக் கொண்ட இந்தக் குழுவினர் முகங்களை துணிகளால் மறைத்துக் கட்டி இருந்ததுடன் கைகளில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை வைத்திருந்துள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமையாளர்களை பணயமாக வைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்ற கொள்ளையர்கள் 45 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபா பணம் என்பனவற்றை கொள்ளையிட்டுத் தப்பி சென்றுள்ளனர்.
குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
அதேவேளை கடந்த 27ஆம் திகதி சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள், 47 பவுண் நகைகளையும், ஒரு தொகை பணத்தையும் கொள்ளையிட்டுள்ளனர்.
28 ஆம் திகதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் 24 பவுண் நகைகளையும், ஒரு தொகை பணத்தினையும் கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர்.இவ்வாறாக கடந்த நான்கு நாட்களில் மூன்று வீடுகளில் பாரிய கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.