வெளியிடப்பட்ட 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படை யில் நீர்கொழும்பு ஹரிஸ்சந்திர மகா வித்தியாலய மாணவன் தினுக கிரிஷான் குமார் அதிகூடிய 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
அத்துடன் 197 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தை கம்பஹா கனேமுல்ல வெளிபில்லேவ கனிஷ்ட வித்தியாலயத்தைச் வேர்ந்த இந்துமினி ஜயரத்ன மற்றும் கேகாலை துல்கிரிய கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த சஞ்சன நயனஜித் ஆகிய மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கடவத்தை கிரிலவெல ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த மாணவன் தருல் சகஸ் தர்மரத்ன 196 புள்ளிகளைப்பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
மேலும் 195 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை 12 மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் 10 இடங்களில் தமிழ்மொழிமூலமான மாணவர்கள் இடம்பெறவில்லையென்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பிரிசில் பரீட்சை பெறுபேறுகளை நேற்று முன்தினம் இரவு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டிருந்தது. அதன்படி மாணவர்கள் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தமது பெறுபேறுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது.
அதனடிப்படையில் தமிழ் மொழி மூலம் மாவட்ட மட்டத்தில் கொழும்பு மாவட்டத்தில் பம்பலப்பிட்டி ராமநாதன் மகளிர் கல்லூரி மாணவி நிர்ஜா ரவீந்திர ராஜா 194 புள்ளிகளைப்பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன் அந்த கல்லூரியில் 15மாணவிகள் சித்தியடைந்துள்ளனர்.
அனந்திகா
அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ். சென்ஜோன் பொஸ்கோ ஆரம்ப வித்தியாலய மாணவி உதயகுமார் அனந்திகா 194 புள்ளிகளைப்பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு மாணவர்கள் மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளனர். மட்டு.வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் டிலக்சிக்கா வனராஜன் மற்றும் மட்டு.ஓட்டமாவடி சரீபலி வித்தியாலயத்தைச் சேர்ந்த நயீம் முகமட் சஜில் ஆகிய மாணவர்கள் 191 புள்ளிகளையும் பெற்று மாவட்டத்தில் முதலித்தைப் பெற்றுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் மகா விதியாலய மாணவிகளான உதயராசா அவிர்சாஜினி மற்றும் ஜெயகுமார் லெவீத் ஆகியோர் 190 புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நல்லதண்ணிர் ஆரம்ப வித்தியாலய மாணவி ஹொஸ்னீ என்ஸலேக்கா 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
அனுராதபுரம் மாவட்டத்தில் ஹோரா பொள முஸ்லிம் வித்தியாலய மாணவன் எம்.எம்.முனீப் மற்றும் ஸாஹிரா மகா வித்தியாலயத்தைச்சேர்ந்த எம்.அர்ஹம், பாதிமா சாரா ஆகியார் 176 புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
குருணாகலை மாவட்டத்தில் பொல்கஹவெல அல் இர்பான் மத்திய பல்லூரி மாணவி பாத்திமா அமாஸா 189 புள்ளிகளைப்பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.