மதுரை : அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி பாணியில் மாணவிகளுக்கு பாலியல் மூளைச்சலவை செய்த பள்ளி ஆசிரியர் தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிக்கொண்டு +2 மாணவியுடன் தலைமறைவானது அம்பலமாகியுள்ளது.
கல்லூரி மாணவிகளை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் படுக்கைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் விசாரணை, சிபிசிஐடி விசாரணை என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியும் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி, மகள்களை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு ராஜேஸ்வரன் மதுரையில் உள்ள மெட்ரிக் பள்ளி ஒன்றில் பணிக்கு சேர்ந்துள்ளார்
மாணவிகளின் பெற்றோரை அணுகி அவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க உதவுவதாகவும் தன்னிடம் டியூஷனுக்கு அனுப்பும்படியும் கோரியுள்ளார்.
இதன்படி ராஜேஸ்வரனிடம் டியூஷன் படிக்க வந்த மாணவிகளிடம் ஆபாச வீடியோக்களை காட்டியும் ஆசை வார்த்தை கூறியும் மூளைச்சலவை செய்துள்ளார்.
தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இதில் +2 மாணவி ஒருவர் ஆசிரியரின் காதல் வலையில் விழுந்ததையடுத்து கடந்த ஏப்ரல் 10ம் தேதி இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
போலீசார் தன்னை தேடாமல் குழப்பம் ஏற்படுத்துவதற்காக ராஜேஸ்வரன் தன்னுடைய சகோதரர் உதவியுடன் தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஒட்டியுள்ளார்.
தான் குடியிருந்த பகுதி, பள்ளிக்கு அருகில் மறைவு ஏப்ரல் 11, 2018 என்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டு பள்ளி நிர்வாகமும் ராஜேஸ்வரனுக்கு இரங்கல் கூட்டமும் நடத்தியுள்ளது. ஆனால் அதற்குப் பிறகு தான் ஆசிரியர் மாணவியுடன் தலைமறைவான விவகாரம் தெரியவந்துள்ளது.
ஆசிரியருடன் காணாமல் போன மாணவியின் பெற்றோர் கரிமேடு காவல்நிலையத்தில் போலீசிடம் புகார் அளித்துள்ளனர். தலைமறைவான ராஜேஸ்வரன் தன்னுடைய செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துள்ளதால் அவரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.