நீரிழிவின் நரம்புப் பாதிப்பு என்பது கை கால் எரிவு விறைப்பு என்பதற்கு அப்பால் இருதயம், உணவுத் தொகுதி, தசை நார்கள் போன்ற பலவற்றையும் பாதிக்கக் கூடும் என்பதை சென்ற வாரம் பார்த்தோம்.
இத்தகைய நீரிழிவின் நரம்புப் பாதிப்பிற்கான சிகிச்சையின் முக்கிய அம்சம் நரம்புகள் மேலும் பாதிக்கப்படாமல் தடுப்பது தான். நீரிழிவு காரணமாக அதிகரித்துள்ள இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டான அளவிற்குக் கொண்டு வருவதே முதற்படியாகும்.
ஆரோக்கியமான உணவு முறையைக் கடைப்பிடிப்பதுடன், தினசரி உடற்பயிற்சிகள் செய்வதும் மருத்துவர்கள் சிபாரிசு செய்யும் மருந்துகளை கால நேரம் தவறாது ஒழுங்காக உட்கொள்ளவும் வேண்டும்.
“கொஞ்சம்தான் கூட சீனி இரத்தத்திலை இருக்கு” என்று சொல்லிக் கொண்டு அதைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்டாதவர்களுக்குத்தான் இப் பிரச்சினைகள் அதிகம் தோன்றுகிறது.
சிகிச்சை
சிகிச்சையைப் பொறுத்த வரையில் ஒரே விதமான சிகிச்சை பயன்தராது. எத்தகைய நரம்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் எத்தகைய பாதிப்புகள் நோயாளிக்கு ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து சிகிச்சை வேறுபடும்.
வலி எரிவு
கால் கைகளில் வலி, எரிவு, குறட்டல், குடைச்சல் பல விதமான வேதனைகள் நரம்பு பாதிப்பால் ஏற்படலாம். இவை சிலரில் தூக்கத்தைக் குலைக்குமளவு கடுமை யானதாகவும் இருக்கக் கூடும். சாதாரண வலி நிவாரணி மாத்திரைகள் இவற்றைத் தணிக்க உதவமாட்டா. இருந்தபோதும் அவற்றைத் தணிக்க வேறு விதமான பலவித மருந்துகள் உள்ளன.
இவற்றில் சில வழமையாக மனச் சோர்வு வலிப்பு நோய் போன்றவற்றிக்குப் பயன்படுத்தப்படுபவை. “எனக்கு ஏன் மனச்சோர்வு மருந்தைத் தந்தனீங்கள்” என்று சில நோயாளிகள் மருத்துவருடன் மல்லுக் கட்டுவதுண்டு. ஒரே மருந்திற்கு பல்வேறு விதமான பயன்கள் உண்டு என்பதைப் புரியாததால்தான் இந்தக் குழப்பம் சிலரில் ஏற்படுகிறது.
உட்கொள்ளும் மருந்துகள் மட்டுமின்றி வெளியே பூசும் அல்லது ஒட்டும் மருந்துகளும் சிலரில் நல்ல பலனைத் தரும். இவற்றைத் தவிர alpha-lipoic acid போன்ற ஒட்சிசன் எதிரிகளும், evening primrose oil போன்ற சில விட்டமின் மாத்திரைகளும் சிலரில் உதவும். மருத்துவ ஆலோசனையுடன் இவற்றை ஒழுங்காக உபயோகித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
இரைப்பை மற்றும் சமிபாட்டுத் தொகுதி அறிகுறிகள்
வயிற்று ஊதல், பொருமல், உணவு சமிபாடு அடையாமை, ஏப்பம், பசியின்மை, வயிற்றுப் பிரட்டு போன்ற அறிகுறிகள் சிலருக்கு பெரும் தொல்லையாக அமையலாம். இதற்குக் காரணம் நரம்புப் பாதிப்பால் உணவுகள் நீண்ட நேரம் இரைப்பையில் தேங்கி நிற்பதாகும்.
ஒரே நேரத்தில் வயிறு நிறைய உண்ணாது சிறிய சிறிய உணவுகளாக அடிக்கடி உண்ணுதல், உணவில் எண்ணை மற்றும் கொழுப்புப் பதார்த்தங்களைத் தவிர்த்தல், நார்ப்பொருள் உள்ள உணவுகளை அளவோடு உண்ணுதல் போன்ற நடைமுறைகள் மட்டுமே இவர்களது தொல்லையை இல்லாது ஒழிக்கப் போதுமானதாக இருக்கலாம்.
போதிய பலன் கிட்டாது விட்டால் உணவுகளை விரைந்து இரைப்பையிலிருந்து வெளியேறச் செய்யும் erythromycin, metoclopramide போன்ற மருந்துகள் உதவலாம். மருத்துவரின் ஆலோசனையுடன் இவற்றை உபயோகிக்க வேண்டும் என்பது முக்கியமாகும்.
சிறுநீர் கழித்தல் மற்றும் பாலியல் பிரச்சினைகள்
பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம்.சிலரில் சிறுநீரில் கிருமித் தொற்று அடிக்கடி ஏற்படுவதுண்டு. இதைத் தடுக்க போதிய நீராகாரம் எடுப்பது முக்கியம். சிறுநீரானது சிறுநீர்ப்பையில் அதிக நேரம் தேங்கி நிற்பதைத் தடுக்க வேண்டும்.
நேரம் வைத்து 3 மணி நேரத்திற்கு ஒரு தடவை சிறுநீர் கழிப்பது உதவலாம். தன்னை அறியாது சிறுநீர் திடீரென சிந்திவிடுபவர்களுக்கும் இது உதவும். கிருமித் தொற்றைக் குணமாக்க மருத்துவர்கள் அன்ரிபயோடிக் மருந்துகள் தரவும் கூடும்.
ஆண் குறி விறைப்படையாமை நீரிழிவு நரம்புப்பாதிப்புள்ள பலரில் ஏற்படக் கூடிய ஒரு பாரிய சிக்கலாகும். ஆசையிருந்தும் செயற்பட முடியாமை பலரது மனதை வாட்டுவதைக் காணலாம். விறைப்படையாமைக்கு ஹோர்மோன் பிரச்சினைகளும் காரணமாக இருக்கலாம். அதை குருதிப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும்.
நரம்புப் பாதிப்பால் ஆண் குறி விறைப்படையாது இருப்பதைச் சமாளிப்பதற்கான மருந்துகள் உள்ளன. அவற்றைத் தவிர சில ஊசி மருந்துகளும், உபகரணங்களும் சிலருக்குத் தேவைப்படலாம். சத்திர சிகிச்சையும் ஒரு சிலரில் உதவும்.
பெண்களைப் பொறுத்த வரையில் யோனி வரட்சி அடைதல் ஒரு முக்கிய பிரச்சினையாகும். இதனால் பாலுறவின் போது வேதனை ஏற்படலாம். யோனியில் பூசும் சில கிறீம் மருந்துகள் உதவும். உறவின் உச்ச நிலையை எட்ட முடியாமை, பாலியல் நாட்டமின்மை போன்ற பெண்களின் பிரச்சினைகளுக்கு அதற்கான மருத்துவ நிபுணரை நாட வேண்டி இருக்கும்.
தலைச்சுற்று மயக்கம்
தலைச்சுற்று, தலை அம்மல், ஒண்டுமே தெரியாத மாதிரி வருதல், மயக்கமாக வருதல், விழுத்தப் பார்க்குது என்றெல்லாம் பலவாகச் சொல்லுவார்கள். இவைகள் யாவும் குருதிச் சுற்றோட்டத்துடனும் இரத்த அழுத்தத்துடனும் தொடர்புடைய விடயங்கள்.
படுக்கையிலிருந்து அல்லது கதிரையிலிருந்து எழும்போது அவசரமாக எழும்பாது நிதானமாக எழுந்தால் இத்தகைய நிலை ஏற்படாது. இலாஸ்டிக் ஸ்டொக்கிங் அணிவது சிலருக்கு உதவக் கூடும்.காரணமானது சோடியம் சத்து குறைவதாக இருந்தால் உணவில் உப்பின் அளவைச் சற்று அதிகரிக்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறக் கூடும்.
பாதத்தை பாதுகாத்தல்
நரம்புப் பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் பாதங்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். பாதத்தில் உணர்வு குறைவதால் காயங்கள், உரசல்கள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
அவற்றில் கிருமி தொற்று ஏற்பட்டபோதும் வலி தெரியாததால் அவை பெருகும் வரை நோயாளியின் கவனத்தை ஈர்ப்பதில்லை. அதனால்தான் நீரிழிவு நோயாளர்கள் பலரும் தங்கள் கால் விரல்கள், பாதம், கால் என அங்கங்களை சத்திரசிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகிறார்கள். புகைத்தலும் சேர்ந்தால் பாதிப்பு பல மடங்காக அதிகரிக்கும்.
போரினால் அங்கங்களை இழக்க நேர்ந்தவர்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அங்க இழப்புகளுக்கு முக்கிய காரணம் நீரிழிவு நரம்புப் பாதிப்புத்தான். எனவே ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும் தமது பாதங்களில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.
இளஞ்சூட்டு நீரினால் தினமும் பாதங்களைக் கழுவ வேண்டும். கடும் சூடுள்ள நீர் ஆகவே ஆகாது. நீரினுள் நீண்ட நேரம் கால்களை வைத்திருப்பது கூடாது. இது அவற்றை மென்மையாக்கி நோய் வர வாய்ப்பளித்துவிடும். மென்மையான சவர்க் காரத்தை மட்டும் உபயோகிக்க வேண்டும். விரல்களுக்கிடையே உள்ள நீரை மென்மையான டவலினால் துடைத்து அகற்ற வேண்டும்.
பாதங்களை தினமும் பூரணமாகப் பரிசோதிக்க வேண்டும். பாதங்களை நேரடியாகப் பார்ப்பது சிரமம் ஆதலால், ஒரு கண்ணாடியை கீழே பிடித்து அதன் விம்பத்தின் ஊடாகத் தெளிவாக பார்க்கலாம்.பாதங்களை சொரப்பின்றி ஈரப்பதமாக வைத்திருக்க லோசன்களை உபயோகிக்கலாம். இருந்தபோதும் கால் விரல் இடுக்குள் இடையே அவற்றைப் போடுவது ஆகாது.
கால் விரல் நகங்களை வெட்டி அகற்றும் போது வளைத்து வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும். வளைத்து வெட்டும்போது நகங்களுக்கு அருகில் உள்ள சருமம் காயமுறக் கூடும். இதனால் கிருமி தொற்றுவது அதிகமாகும். பாதணிகள் அணியாது ஒரு போதும் வெளியே செல்லக் கூடாது. பாதணிகள் இறுக்கமானதாக இருக்கக் கூடாது. சொக்ஸ்கள் தடித்தவையாகவும் மென்மை யானவையாகவும் பருத்தியிலானதாகவும் இருக்க வேண்டும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்