ஜேர்மனியில் ஊசி மூலம் மாரடைப்பு ஏற்படும் மருந்தை ஏற்றி 86 நோயாளிகளை ஆண் தாதி ஒருவர் கொலை செய்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீல்ஸ் ஹீகல் என்ற 40 வயது சீரியல் கில்லர் 1999-2002 ஆம் ஆண்டுகளில் ஓல்டன்பார்க் மருத்துவமனையிலும், 2003 முதல் 2005 வரையில் டெல்மென்ஹார்ஸ்ட் மருத்துவமனையிலும் தாதியாகப் பணியாற்றினார்.
இவர் 2015 ஆம் ஆண்டு இரண்டு கொலைகள் மற்றும் இரு கொலை முயற்சிகள் தொடர்பாக குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
இவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர் குறைந்தது 43 நோயாளிகளையாவது கொன்றிருப்பார் என்று வழக்கறிஞர்கள் தரப்பு சந்தேகம் எழுப்பியது.
இதனையடுத்து, சில நோயாளிகளின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மரணங்கள் குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டது.
விசாரணையின் போது கொலையாளி நீல்ஸ் ஹீகல், சுமார் 90 நோயாளிகளுக்கு மாரடைப்பு வருமாறு மருந்துகளைக் கொடுத்து பிறகு அவர்கள் இருதயத்தை தன் சொந்த முயற்சியில் மீள் இயக்கத்திற்குக் கொண்டு வரும் நடைமுறை தனக்கு த்ரில்லிங ஆக இருந்ததாகக் தெரிவித்துள்ளார்.
அம்மாதிரி சிகிச்சை அளித்து பிழைத்தவர்கள் மத்தியில் தாம் ஒரு நாயகனாகிவிடும் ஆசைக்காக இதனைச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது நீல்ஸ் தன் த்ரில் அனுபவத்திற்காக கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 84 பேர்களின் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 134 சடலங்கள் இந்தக் கொலை தொடர்பாக தோண்டி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.