அனைவரையும் நோயில் இருந்து பாதுகாப்பதே எனது கடமை. அதனால் எதிர்காலத்தில் வைத்தியராக வரவேண்டும் என்பதே எனது ஆசை என புலமைப்பரிசில் பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி உதயராசா அவிர்சாஜினி தெரிவித்துள்ளார்.
தனது பரீட்சைக் பெறுபேறு குறித்து கருத்து தெரிவிக்கையில்,
190 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றமை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இந்த நிலையை அடைந்தமைக்கு முதலில் இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.
என்னை வழிநடத்திய எனது பாடசாலை அதிபர், ஆசிரியர், அப்பா, அம்மா, அப்பம்மா, மாமா ஆகியோருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
என்னுடைய அப்பா விரதேச செயலாளர். அம்மா நான் படிப்பதற்கு அரும்பாடுபட்டார். நான் தினமும் காலை 4 மணிக்கு எழுந்து படித்து வந்தேன். அப்பா நல்ல புத்தங்களை வாங்கித் தந்தார்.
அவற்றையும் நான் படித்தேன். எதிர்காலத்தில் வைத்தியராக வருவதே எனது ஆசை. இதன் மூலம் அனைவரையும் நோயில் இருந்து காப்பேன்.
ஏனைய மாணவர்களும் பெற்றோரினதும், அதிபரினதும், ஆசிரியர்களினதும் சொற்கேட்டு நடந்து அனைவரும் படித்து எதிர்காலத்திலும் எமது மாவட்டத்திற்கும், பாடசாலைக்கும் பெருமைத் தேடித் தரவேண்டும் என்றும் தெரிவித்தார்.