கிருஷ்ணகிரி: பனை மரத்தின் உச்சியில் தலைகீழாக தொங்கியபடியே கணேசன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். 50 வயதான கணேசன் பனை மரம் ஏறும் தொழிலாளி ஆவார்.
இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமும் ஆகி விட்டது. இந்நிலையில், நேற்று காலை பதநீர் எடுக்க மரத்தில் ஏறினார்.
அப்போது திடீரென அவர் உச்சியிலிருந்து தலைகீழாக தொங்கியுள்ளார். பதநீர் பறிக்க போனவர் திடீரென தலைகீழாக தொங்கவும், அவரது நிலையை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தனர்.
அவர்களும், தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து, உடனடியாக கணேசன் கீழே விழுந்துவிடாமல் இருக்க வலையை விரித்து கட்டினர்.
ஆனால், காவல்துறை, தீயணைப்பு துறை என இரண்டு துறையினர் வந்தும், மரத்தின் உச்சி வரை செல்ல அவர்களிடம் ஏணி இல்லை. சுற்றுவட்டார பகுதியிலும் உச்சிக்கு செல்லும் அளவுக்கு பெரிய ஏணி கிடைக்கவில்லை.
தீயணைப்பு வீரர் யாராவது ஒருவர் மரத்தில் ஏறி கணேசனை மீட்கலாம் என்றாலும், மரத்தின் உச்சியில் எடை தாங்காது என்ற நிலை ஏற்பட்டது.அதனால் ஜேசிபி மூலம் பனை மரத்தை மோத முடிவு செய்தனர்.
கடைசியில் மரத்தில் ஜேசிபி வண்டியை மோதி மோதியே, தொங்கிக் கொண்டிருந்த கணேசனை கீழே விரித்துள்ள வலையில் விழ வைக்க முயற்சி செய்தார்கள்.
பிறகு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள்.ஆனால் கணேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்.
மேலும் மர உச்சியில் கணேசன் ஏறியபோதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் டாக்டர்கள் சொன்னார்கள். இது சம்பந்தமாக சாமல்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.