பருவக் காதல் பருவ மழையைப் போன்றது. வண்ண வண்ண ஆடை அணிந்து நெளிவு சுழிவுகளைப் பார்த்து கண்ணாடி முன் தான் அழகாக இருக்கின்றேனா? எனப் பல முறை ரசிக்கும் இளம் பெண்களுக்கு தன்னையும் ஒருவன் ரசிக்கின்றான் என்றதும் அவளை அறியாமலே அவன் மீது ஈர்ப்பும் விருப்பமும் ஏற்படுவது இயல்பே.
ஆனால், அது இந்த பருவத்தில் ஏற்படும் எதிர்ப்பாலினக் கவர்ச்சியே. இதை விட சிறந்த வாழ்வு உண்டு என்பதை உணரும் முன்னரே நிரந்தரமற்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரமான, பாரதூரமான முடிவினை நோக்கி செல்கின்றனர் இன்றைய இளம் பெண்கள்.
ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகந்த,எல்லகந்த பிரதேசத்தில் கடந்த பௌர்ணமி தினத்தன்று இரேஷா லக்மாலி என்ற பதினெட்டு வயது இளம் பெண் தன் காதலன் ஷமிலவின் வீட்டிலேயே இரவு பத்து மணியளவில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் ஹங்வெல்ல பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரேஷா, ஷமில இருவரும் காதலர்கள். இரண்டு வருடங்களாக இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாகத்தான் வாழ்ந்திருக்கின்றார்கள். எனினும் இருவரும் திருமணம் முடித்திருக்கவில்லை. தனது பதி னாறாவது வயதிலேயே “வாழ்ந்தால் ஷமிலவுடன் தான்” என்ற முடிவுடன் தனது வீட்டை விட்டு வந்து விட்டாள் இரேஷா.
அப்போது ஷமிலவுக்கு 21 வயதாக இருந்த போதும் இரேஷாவுக்கு பதினாறு வயது தான். எனவே அவளுடைய வயது திருமணம் முடிக்கும் வயதில்லை என்ற காரணத்தினால் இருவருக்கும் சட்டரீதியாக திருமணம் செய்துகொள்ள முடியவில்லை. பதினெட்டு வயது வந்த பின் திருமணம் செய்து கொள்வோம் என்ற முடிவுடன் ஷமிலவின் வீட்டிலேயே தங்கினாள் இரேஷா.
இரேஷா உயிரிழந்த போது அவளுக்கு பதினெட்டு வயதும் இரண்டு மாதங்களுமே இருக்கும். அடுத்த மாதமளவில் இரேஷா-, ஷமில ஆகிய இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்த நிலையிலேயே இரேஷா தன் வாழ்வின் இறுதிப்பயணத்தை நோக்கி விடை பெற்றுச் சென்று விட்டாள்.
இரேஷாவுக்கு பதினைந்து வயதாக இருக்கும் போதே கல்வியில் நாட்டம் இல்லாமல் தனது பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தி விட்டாள். இக்காலப்பகுதியிலேயே ஷமிலவுடனான காதல் மலர்ந்தது. இருவரும் ஒரு வருடமாக இரகசியமான முறையிலேயே தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இரேஷாவின் வீட்டுக்கு இவர்களின் காதல் தெரியவர, தாய் உட்பட குடும்பத்தில் இருந்த பெரியவர்கள் அனைவரும் இவர்களது காதலை எதிர்த்தனர். அதற்கு அவளின் வயதும் ஒரு காரணமாக அமைந்தது.
எனவே தான் தனது பதினாறாவது வயதிலேயே ஷமிலவுடன் ஒன்றாக வாழ முடிவெடுத்து தன் குடும்பத்தை பகைத்துக்கொண்டு ஷமிலவே கதியென வந்துவிட்டாள்.
இரேஷாவின் குடும்பத்தினரின் கோபம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. இந்த வருடத்தில் இரேஷாவின் குடும்பத்தினரும் இவர்களின் திருமணத்துக்கு சம்மதித்திருந்தனர்.
எனினும் திருமணம் முடிக்காமல் ஒன்றாக வாழ்ந்த இருவரின் வாழ்விலும் நிம்மதி இருக்கவில்லை. இருவருக்குமிடையே இருந்த காதல் நாட்கள் செல்லச் செல்ல கசந்தது. அடிக்கடி சண்டை, சச்சரவுகள் எனப் பிரச்சினைகள் இருந்துகொண்டே தான் இருந்தன.
அதுவும் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையில் சண்டை அதிகரித்ததால், மீண் டும் தனது வீட்டுக்கே இரேஷா செல்லுவதும் பின் ஷமில சென்று சமாதானப்படுத்தி இரேஷாவை அழைத்து வருவதுமாய் இருந்தது.
இதனிடையே, இரேஷா ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு வேலைக்காகச் செல்ல அங்கு தினேஷ் என்ற புதுக்காதலனின் அறிமுகம் கிடைத்தது.
ஒரு நாள் அவள் அவனுடன் மோட்டார் சைக்கிளில் வரும்போது ஷமிலவின் சிற்றன்னை கண்டு தன் அக்காவின் மகன் இவளால் ஏமாற்றப்படக்கூடாது அவனைக் காப்பாற்ற வேண்டும் என எண்ணி ஷமிலவிடம் தான் கண்ட உண்மைகளைக் கூற இருவருக்கும் இடையேயுள்ள பிரச்சினை மேலும் வலுவானது.
இரேஷாவும் தினேஷுடனான தன் காதல் உண்மை என்று ஒப்புக்கொண்டாள். இதனையறிந்த தினேஷ் நேரில் வந்து “இந்த தொடர்பினை நாங்கள் முடித்துக்கொள்கின்றோம் இனி நான் இவளுடன் வர மாட்டேன், நீங்கள் இருவரும் திருமணம் முடித்து சந்தோஷமாக இருங்கள்” என்று இருவரையும் சமாதானப்படுத்தி விட்டுச்சென்று விட்டான்.
அதன் பின்னர் வெளிப்படையாக இருவரும் சேர்ந்திருப்பது போல் இருந்தாலும் ஷமிலவுக்குள் இரேஷா மீது ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.
சிறு சிறு விடயங்களுக்கு அவள் மீது கோபப்படுவதும் சண்டையிடுவதும், பின் சமாதானம் ஆவதுமாய் இருந்தான். பௌர்ணமி தினமான அன்றும் மாலை நேரத்தில் இருந்தே இருவருக்குள்ளும் சண்டையாகவே இருந்திருக்கின்றது.
அவள் விகாரைக்கு அழைத்து செல்லுமாறு கேட்க அவன் மறுத்தது மட்டுமன்றி, அவன் அவளை இரும்புக் குழாயினால் தாக்கியிருக்கின்றான். ஷமில பக்கத்திலிருந்த அண்ணன் வீட்டுக்குச் செல்ல அவளும் அவனை விடாமல் பின் தொடர்ந்த வண்ணம் சென்றிருக்கிறாள்.
பின் அண்ணனின் வீட்டு முற்றத்தில் இருந்த விளக்குமாறையும் எடுத்து பல தடவைகள் அவளை அடித்துத் தாக்கியிருக்கின்றான். இறுதியில் சண்டையைப்பார்த்து சலித்துப்போன நண்பன் புபுது ஷமிலவை வெளியே அழைத்துச் செல்கிறான்.
பத்து நிமிடம் கழித்து அவன் வீட்டுக்கு திரும்பி வரும் போதே இரேஷா தூக்கில் தொங்கியவாறு இருந்திருக்கின்றாள்.
ஷமில பொலிஸ் விசாரணையில் இவ்வாறு தெரிவித்தார் “அண்ணன் வீட்டுக்கு சென்று நான் பத்து நிமிடம் கழித்து மறுபடியும் வீட்டுக்கு வந்தேன். நான் வரும் போது வீட்டின் முன் கதவு அரைவாசிக்கு திறக்கப்பட்ட நிலையில் மின் குமிழ்கள் எரிந்தவாறு காணப்பட்டன.
வீட்டுக்குள் நுழையும் போதே தொங்கிக்கொண்டிருந்த சேலை என் மேலே பட்டது. பார்க்கும் போது இரேஷா தூக்கில் தொங்கியவாறு இருந்தாள். உடனடியாக நான் அவளை கீழே இறக்கி அவளின் நாடியைப் பிடித்துப் பார்த்தேன்.
அவள் இறந்திருந்தாள். நான் சத்தமிட்டு அழ ஆரம்பிக்க பக்கத்து வீட்டாரும் வந்து சேர்ந்தார்கள். அவர்களும் நாடியைப் பிடித்துப் பார்த்து அவள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதன் பின்னர் தான் நாங்கள் பொலிஸ் நிலையத்துக்கு வந்தோம்” எனத் தெரிவித்தான். ஷமிலவின் வாக்குமூலம் கிடைக்கப்பெற்ற அன்றிரவே பொலிஸார் விசாரணைகளை நடத்தினர்.
இரேஷா தூக்கில் தொங்கிய இடத்தை பரிசோதனைக்குட்படுத்தியதுடன், இரேஷாவின் உடலையும் பரிசோதனைக்குட்படுத்திய பொலிஸாருக்கு அவளின் உடலில் காணப்பட்ட இரத்தக் கறைகள் சந்தேகத்தை உண்டுபண்ணின.
அவளின் முகத்திலிருந்து நெஞ்சு பகுதி வரை இரத்தம் வழிந்தோடிய நிலையில் காணப்பட்டது. தலையில் காணப்பட்ட பெரிய காயமானது ஷமிலவினால் இரேஷா தாக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸாரை சந்தேகிக்கப்பட வைத்தது. ஷமிலவை உடனடியாக கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தினர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஷமில காதலியைத் தாக்கி மரணமடையச் செய்த குற்றத்துக்காக அவிசாவளை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
எனினும் இரேஷாவை பல முறை தாக்கியதை ஒப்புக்கொண்ட அவன், அவளது மரணத்துக்கு தான் காரணமில்லை எனவும் அவள் தனக்குத் தானே தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாகவும் கூறியதுடன் அடுத்த மாதமளவில் தாங்கள் திருமணம் செய்ய இருந்ததாகவும் தெரிவித்துள்ளான்
இரேஷாவின் மரண சம்பவத்தில் இரேஷாவின் அக்காவின் சாட்சியமும் ஷமில மீதான சந்தேகத்துக்கு காரணமாக அமைந்தது. இரேஷா பெளர்ணமி தினத்தன்று தன் அக்காவிடம் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு தான் விகாரைக்கு செல்ல வேண்டும் எனவும் தனக்கு 300 ரூபா தரும்படி கேட்டிருக்கிறாள்.
அக்கா தருகின்றேன் எனக்கூற அக்காவுடன் தொலைபேசி அழைப்பில் இருந்தவாறே ஷமிலவிடம் ‘பாரு அக்கா விகாரைக்குச் செல்ல 300 ரூபா தாறேன் என்று சொல்லுகின்றாள், நீ அவசரப்பட்டு தானே என்னை அடித்தாய்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், தான் மறுபடியும் அழைப்பை ஏற்படுத்திய போது தொலைபேசி நிறுத்தப்பட்டு இருந்தது எனவும் தெரிவித்துள்ளாள். இதுவும் ஷமில மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.
இரேஷாவின் மரணம் தற்கொலையா? அல்லது ஷமிலவின் தாக்குதலால் தான் உயிரிழந்தாளா? என்ற விசாரணைகள் தொடர்ந்த நிலையில் ……… சந்தேகத்தின் பேரில் ஷமில தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான்.
இத்தகைய சம்பவங்கள் பருவ வயதில் உள்ள இளம் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், அதற்கான சரியான வழிகாட்டல் இன்மையினையும் புலப்படுத்துகின்றன.
பதின்மூன்று வயது தொடக்கம் பதினெட்டு வயது வரையான கட்டிளமைப்பருவம் உடல், உள, சமூக ரீதியான மாற்றங்களை சந்திக்கும் ஒரு காலம். அதுவும் அந்தக் காலப்பகுதியில் எதிர்ப்பாலினர் மீது ஏற்படும் கவர்ச்சி வெறும் இயல்பானதே. சில சினிமா,விளையாட்டு துறை சார்ந்த பிரபலங்களின் நடை, உடை, பாவனைகள் பல சமயங்களில் நம்மை வெகுவாகக் கவர்ந்திழுக்கும்.
அதுபோல் தான் இந்த வயதில் வரும் எதிர்ப்பாலினர் கவர்ச்சியும். பதினைந்து வயதில் எடுக்கும் முடிவுகள் இருபது வயதில் முட்டாள்தனமாகவே தோன்றும். 15,16 வயதில் திருமணம் முடிக்கும் பெண்களுக்கு 20வயது ஆகும் போது “இவ்வளவு தான் வாழ்க்கையா?” என்று சலிப்புத்தன்மையை ஏற்படுத்தி விடும்.
அந்த சமயத்தில் புதிய உறவின் தெரிவுக்கு இடம் கொடுக்க மனம் ஏங்கும். சில சமயங்களில் அந்த ஏக்கமே இரேஷாவுக்கு ஏற்பட்ட நிரந்தமான முடிவினைப் போல அமைந்துவிடுகின்றது.
அ.வசந்தா