யாழ்ப்பாணத்தை அச்சமான ஒரு சூழல்நிலைக்குள் வைத்திருக்க முற்படும் நிலைப்பாடுக்காகவே பல்கலைக்கழக மாணவர்கள் மீதான படுகொலை அமைந்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞனம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று அதிகாலை இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கொக்குவில் குளப்பிட்டிச்சந்தியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞனம் சிறீதரன்,
துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்து சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கல்வி பயின்று பல்கலைக்கழகம் வந்தவர்களை நடு வீதியில் வைத்து மூர்க்கத்தனமாக பொலிஸார் சுட்டுக்கொன்றது உண்மையில் வன்மையாக கண்டிக்க வேண்டிய விடயம்.
இந்த மாணவர்கள் மீதான சூட்டுச் சம்பவம் ஊடாக யாழ்ப்பாணத்தின் நீதித்துறைக்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் பயங்கரமான செய்தியை கொடுத்திருக்கின்றது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
குமாரபுரம் படுகொலைத் தீர்ப்பை போன்று இச்சம்பவத்தையும் இனிவரும் காலங்களில் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடும். ஆனால் நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும். இந்த கொலைக்கு நியாயமான தீர்வு வரும் வரை.
இச்சம்பவமானது மிக திட்டமிட்ட கொலையாகத்தான் நாங்கள் கருதுகின்றோம். யாழ்ப்பாணத்தில் நீதித்துறையின் ஸ்த்திர தன்மையை குழப்பும் முயற்சியாகவே இது உள்ளது என மக்கள் கருதுகின்றார்கள்
இங்குள்ள நிலைமைகளை குழப்புவதற்காக அரசாங்கத்தினால் பொலிஸாரை வைத்து நடாத்தப்பட்ட நடாகமாக இருக்காலம் எனவும் மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்.
இது மட்டுமல்ல இன்று யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்படுவதனால் இதனை கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாண நீதித்துறை இறுக்கமான கட்டமைப்பபை உருவாக்கும் போது அதனை குழப்பும் ஓர் முயற்சியாகவே இது திட்டமிட்டு நடைபெற்றுள்ளது என மக்கள் நம்புகின்றார்கள் என்றும் சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளர்.