பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘ரத் தரங்’ எனப்படும் முதியன் சலாகே சுரங்க குமார பெரேரா சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார்.
முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கொடை– களனி முல்ல வீதியில் வைத்தே அடையாளம் தெரியாதோரினால் அவர் நேற்று முற்பகல் 10.15 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அறியமுடிவதாவது,
அங்கொடை – களனி முல்ல வீதியில் நேற்று முற்பகல் வேளையில் ரத்தரங் எனப்படும் மேற்படி பாதாள உலகக் குழு உறுப்பினர் செல்லும் போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்து அடையாளம் தெரியாத இருவர் வந்துள்ளனர்.
இவர்கள் ரத்தரங் மீது சரமரியான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து 119 அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக அயலில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு விடயத்தை தெரியப்படுத்தவே துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான ரத்தரங் என்பவரை பொலிஸார் முல்லேரிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
எனினும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழந்த ரத்தரங் எனப்படும் மேற்படி பாதாள உலகக் குழு உறுப்பினர் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவராவார்.
இதன் காரணமாக துப்பாக்கிச் சூடு இடம்பெறும் போது ரத்தரங் மோட்டார் சைக்கிள் ஒன்றில் களனி முல்ல பகுதியில் இருந்து முல்லேரியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரத்தரங் இன் சடலமானது முல்லேரியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்ப்ட்டுள்ளதுடன் முல்லேரிய பொலிஸாரும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.