பாராளுமன்றம் நாளை திங்கட்கிழமை பிற்பகல் 1மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் மீண்டும் கூடவுள்ளது.
மூன்றாவது அமர்வின் முதல் மூன்று நாட்களும் பாராளுமன்றம் போர்க்களமாகி இருந்த நிலையில் அமைதியான அமர்வொன்று நாளை இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினரிடமும் எழுந்துள்ளது.
இந்நிலையில், முற்பகல் 11.30க்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற விவகார செயற்குழு வலு இழந்துள்ளமையினால் நாளைய அமர்வின் ஒழுங்குப் பத்திரத்தை நிர்ணயம் செய்வது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தின்போது இணக்கம்
ஏற்படாததன் காரணமாக வெளியேறி இருந்த ஆளுந்தரப்பினர், மேற்படி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் தாம் இணங்காத ஒழுங்கு பத்திரத்தை முன்னெடுக்க முயற்சி செய்தால் அதற்கு சபாநாயகரே பொறுப்புக் கூற வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பின்னணி
கடந்த 14, 15 ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடியபோது பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.
குறிப்பாக வௌ்ளிக்கிழமை அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றி விட்டு வெளியேறிய சபாநாயகர் கருஜயசூரிய மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது பலரது கவனத்துக்கும் ஆளானது.
ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் மிகவும் மோசமான வகையில் நடந்து கொண்டனர்.
மிளகாய்ப் பொடியை வீசியும் கதிரைகளை உடைத்தும் புத்தகங்கள், மைக்ரோபோன் என்பவற்றை வீசி எறிந்தும் இத்தாக்குதலில் ஈடுபட்டனர்.
அதுமாத்திரமன்றி சபாநாயகரின் கதிரையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமர்ந்து கொண்டார். தொடர்ந்து சபாநாயகரின் கதிரை தள்ளி வீழ்த்தப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டது.
இது பாராளுமன்ற வரலாற்றில் மிகவும் மோசமான வன்முறையாகவே மக்களால் பார்க்கப்பட்டது. மேலும், அன்றையதினம் ஏற்பட்ட அரச சொத்துக்களுக்கான இழப்பு பல மில்லியன் என்றும், பாராளுமன்றம் ஒருநாள் கூடுவதற்கான முழுமையான செலவு இரண்டுகோடி ரூபாவுக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சட்ட நடவடிக்கை?
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட களேபரத்தை சிவில் அமைப்புக்கள், பொது நிறுவனங்கள், சமயத் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வன்மையாக கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் சபையில் கலவரங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் சுமார் 10பேர் பாராளுமன்றத்திலிருந்தும் இடைநிறுத்தப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை பாராளுமன்றம் கூடியதும் முதற்கட்டமாக இந்நடவடிக்கை எடுக்கப்படலாம் என பெயர் கூற விரும்பாத அரசியல் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
அதேவேளை கடந்த வௌ்ளிக்கிழமை போல் மீண்டும் ஓர் அசம்பாவிதம் பாராளுமன்றத்தில் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மூன்று தெரிவுகள்
அந்தவகையில் 3 தெரிவுகள் இருப்பதாக அவர் கூறினார். முதலாவது பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ விட்டுக் கொடுத்து தனது பதவியை இராஜிநாமா செய்வதுடன் தனது உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறும் ஜனநாயகத்துக்கு வாய்ப்பளிக்குமாறும் கோர வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரி பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு வழிவிடுவதுடன் பாராளுமன்ற சம்பிரதாயங்கள் மீறாதிருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மூன்றாவதாக ரணில் விக்கிரமசிங்க தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டு அவரை பிரதமராக குறுகிய காலத்துக்காவது நியமிக்க வேண்டும்.
இவையனைத்துக்கும் அப்பால் அனைத்து தரப்பினரும் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்ல விருப்பம் கொண்டிருப்பதால் இடைக்காலத்துக்கேனும் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டில் இருந்தும் தளர்ந்து ஜனநாயக வழியில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாறாத ஜனாதிபதி
இதேவேளை தவிர்க்க முடியாத காரணத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானால் தான் ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்வதாக ஜனாதிபதி மீண்டும் நேற்றைய தினம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முற்றுப்புள்ளி வைக்க முயற்சி
இந்நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜனாதிபதி உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரணில் விக்கிரமசிங்க தரப்பு, மஹிந்த தரப்பு மற்றும் மைத்திரி தரப்பு என இரவு பகலாக கூடி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் இன்று சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் ஜனாதிபதி அவர்களின் ஆதரவை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவை பின்னடிக்கும் பட்சத்தில் விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கான வியூகத்தை அமைக்கும் பணியில் அரசியல் தலைமைகள் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.