பாராளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கூடவிருந்த நிலையில், சபாபீடத்தில் ஆளுந்தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் தமதமாகின.
பாலித தேவரப்பெரும மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரை கைதுசெய்யவேண்டும் எனக்கோரி ஆளுந்தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவர் அமர்ந்திருந்த அக்கிராசனத்தைச்சுற்றி ஏனைய ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவர்களும் கூடிநின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் செங்கோலுடன் சபாநாயகர் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அக்கிராசனம் நோக்கி வந்தார். இதையடுத்து சபா பீடம் பெரும் போர்க்களம் போன்று காட்சியளித்தது.
அங்கு பாதுகாப்பு வழங்குவதற்காக வந்த பொலிஸார் மீது கதிரைகள் மற்றும் புத்தகங்களால் தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் பொலிஸார் காயத்திற்குள்ளாகினர்.
மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் காயத்திற்குள்ளாகினர்.
இருப்பினும் சபாநாயகர் பெரும் அமளிதுமளிக்கும் மத்தியில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதாக அறிவித்து பாராளுமன்றத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி ஒரு மணிக்கு ஒத்திவைத்தார்.
இதேவேளை, பாராளுமன்றத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் மிளகாய்த் தூள் கரைக்கப்பட்ட நீரால் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோரின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பெரும் குழப்பங்களை மஹிந்த தரப்பினர் ஏற்படுத்தியபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஐக்கிய தேசியக் கட்சியினர், தமிழ் முற்போக்கு கூட்டணியினர், மக்கள் விடுதலை முன்னணியினர் ஆகியோர் தமது ஆசனங்களில் அமர்ந்திருந்து அமைதியாக அவதானித்தனர்.
இதேவேளை, பார்வையாளர் கலரியிலிருந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களை பார்வையிட்டு அவர்களது கையடக்கத்தொலைபேசியில் படமெடுத்துக்கொண்டனர்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தால் பதவியிலிருந்து விலக்கப்பட்டார் எனவும் அவ்வாறு அவரும் அவரது அமைச்சரவைக் குழுவும் விலகவில்லையென்றால் அவர்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஜனநாயக விரோதிகள் எனவும் இதுவரை மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக 3 முறை நம்பிக்கையில்லா பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க மாட்டேன் எனவும் பாராளுமன்ற சம்பிரதாயங்களையும் ஜனநாயக கோட்பாடுகளையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு எதிராக நான் முன்வைத்த நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை, எனது 25 வருட அரசியல் வாழ்வில் இன்று ஒரு கரிநாளாக பார்க்கிறேன். இப்போது ஒரு அரசு என்ற ஒன்று இல்லை எனவும் நம்பிக்கையில்லா பிரேரணையில் அவர்கள் தோற்றுவிட்டார்கள் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தைச் சுற்றி முப்படையினரும் பாதுகாப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு திடீரென உலங்குவானூர்தியொன்று தரையிறங்கியிருந்த நிலையில் அதில் வந்திறங்கிய நபர் யாராக இருக்கலாமென கேள்விகள் எழுந்திருந்தன.