பாலியல் தொந்தரவு கொடுத்த அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவருக்கு எதிராக 152 பெண்கள் சாட்சியம்
அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவருக்கு எதிரான வழக்கில் 152 பெண்கள் சாட்சியம் வழங்கியுள்ளமை அந்நாட்டையே உலுக்கியுள்ளது.
அமெரிக்க ஒலிம்பிக் குழுவில் லாரி நாசர் (54) என்பவர் மருத்துவராகப் பணிபுரிந்தார்.
இதன்போது அவர் தன்னிடம் உடற்பரிசோதனைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுத்ததாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து இவர் மீது மிச்சிகன் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.
முறைப்பாடு செய்தவர்களில் 2012-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மெகய்லா மரோனியும் ஒருவர் ஆவார்.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, லாரியால் பாதிக்கப்பட்ட 156 பெண்கள் அவருக்கு எதிராக சாட்சி வழங்கியுள்ளனர்.
சாட்சியமளித்த பெண்களில் சிலர் பேசியது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களின் சாட்சியங்களைக் கேட்ட நீதிபதி ரோஸ்மரின் லாரியைத் தண்டிப்பதைத் தான் பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், லாரிக்கு 175 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியதுடன், நீ சிறைக்கு வௌியில் வாழத் தகுதியற்றவன் எனவும் கூறியுள்ளார்.