கன்னியாகுமரி மாவட்டத்தில் தொலைல்காட்சிப் பெட்டியை சரிசெய்ய வந்த பக்கத்து வீட்டுக்கார் பாலியல் தொல்லை கொடுத்ததால், பட்டதாரி பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாகர்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளித்த பட்டதாரிப் பெண் பிபிஷாகன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வாழபழஞ்சிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (34). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த 11-ம் தேதி இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் எம்.ஏ பட்டதாரி பெண் பிபிஷா (22). தனது வீட்டில் தொலைக்காட்சியில் பிரச்னை ஏற்பட்டுள்ளது எனவும் அதை, சரிசெய்ய மெக்கானிக்கை அழைத்துவரலாமா என பிபிஷா கேட்டுள்ளார்.
‘நானே சரிசெய்துதருகிறேன்’ எனக்கூறி பிபிஷா வீட்டுக்குச் சென்ற ராஜேஷ், திடீரென அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.
அதிர்ச்சியில் பிபிஷா அலறியதால், ராஜேஷ் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். சப்தம் கேட்டு அப்பகுதியினர் பிபிஷாவின் வீட்டின் முன் குவிந்ததனர். இதை அவமானமாகக் கருதிய பிபிஷா வீட்டில் இருந்த மண்ணெண்ணெயைத் தலையில் ஊற்றி தீக்குளித்தார்.
வீட்டின் முன்பு திரண்டவர்கள் தீயை அணைத்து பிபிஷாவை மீட்டனர். 60 சதவிகிதம் உடல் கருகிய நிலையில் அவர், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
பிபிஷாவின் உறவினர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து புதுக்கடை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 16-ம் தேதி நாகர்கோவில் மாஜிஸ்திரேட் மருத்துவமனைக்கு வந்து பிபிஷாவிடம் வாக்குமூலம் பெற்றார்.
கடந்த 8 நாள்களாக சிகிச்சை பெற்றுவந்த பிபிஷா சிகிச்சைப் பலனின்றி இன்று இறந்தார். உடல் கூறு பரிசோதனைக்காக அவரது உடல் மருத்துவமனையில் உள்ள பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அப்போது பிணவறை முன்பு கூடிய பிபிஷாவின் உறவினர்கள் புகார் அளித்து 8 நாள்களைக் கடந்தும் குற்றவாளியைக் கைது செய்யாமல் போலீஸார் காலம் கடத்துவதாகவும், உடனடியாக ராஜேஷைக் கைது செய்யாமல் இருந்தால் உடலை வங்க மாட்டோம் எனக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது புதுக்கடை போலீஸாரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதற்கு அங்கிருந்த போலீஸார் எதிர்ப்பு தெரிவித்ததால் பிபிஷாவின் உறவினர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பிபிஷாவின் உறவினர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றவாளி ராஜேஷ் தலைமறைவாக இருப்பதாகவும் விரைவில் அவரைக் கைது செய்வோம் எனக் காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பிபிஷாவின் உறவினர்கள் கலைந்து சென்றனர். இன்று மாலை வரை உடல் வாங்கப்படவில்லை.