பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் நாட்டு யுவதி ஒருவர், பெண் சட்டவைத்திய அதிகாரி இல்லாமை காரணமாக மருத்துவ சோதனைக்கு மறுத்துள்ள சம்பவமொன்று அநுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், அவர் அடுத்த நாளே சுவிட்ஸர்லாந்துக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 27ஆம் திகதி அநுராதபுரம் வைத்தியசாலைக்கு சென்ற சுவிஸ் நாட்டு யுவதி ஒருவர் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் தாம் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்து மருத்துவ சோதனையை கோரியுள்ளார்.
எனினும், அந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் சட்டவைத்திய அதிகாரிகள் நால்வரும் ஆண்கள் என்ற காரணத்தால், அவர்களின் மருத்துவ சோதனையை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த சுவிஸ் யுவதி ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அடுத்த நாள் காலையிலேயே அவர் மருத்துவ சோதனையின் நிமித்தம் தமது நாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். எனினும் மரபணு பரிசோதனைக்காக அவர் தமது ஆடைகளை கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி ஏனைய மூன்று யுவுதிகளுடன் கற்கை ஒன்றுக்காக இலங்கை வந்த நிலையில், அநுராதபுரம் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
பின்னர், சம்பவம் இடம்பெற்ற இரவு நண்பிகளுடன் இரவு கேளிக்கை விடுதி ஒன்றுக்கு சென்று மதுபோதையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தமது ஹோட்டல் அறைக்கு திரும்பும்போது வழியை தவற விட்டமையால் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் உதவியை நாடியுள்ளார். இதன்போது அவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Facebook Comments