இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட 10 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்திருந்த நிலையில் அவருக்கு கருக்கலைப்பு செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது, அச்சிறுமி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
தனது உறவினரால் பாலியல் வல்லுறவிற்கு ஆளானதாகக் கூறப்படும் அச்சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய இந்திய நீதிமன்றம் ஒன்று முன்பு அனுமதி மறுத்திருந்தது.
கருக்கலைப்பு செய்வது, அந்த சிறுமியின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என மருத்துவர்கள், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்திருந்தனர்.
வளர்ப்புத் தந்தையால் சிறுமி தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக ரோதக் நகர வடக்குப் பகுதி காவல்துறை அதிகாரி பிபிசியிடம் கூறியிருந்தார்.
வீட்டு வேலை செய்யும் சிறுமியின் தாய், தனது பத்து வயது மகள் கர்ப்பமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
தனது தாய் வேலைக்கு சென்றிருக்கும்போது, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த, தாயின் இரண்டாவது கணவர், இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று எச்சரித்ததாக சிறுமி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுமியின் தாய், தனது கணவர் மீது அளித்த புகாரின் பேரில் அவர் ஏற்கனவே போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.