இன்று சட்டமா அதிபருடன் விஷேட கலந்துரையாடல் : 1400 பக்க அறிக்கையை பொலன்னறுவையில் படித்து முடித்தார்
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர் பில், ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன நாளை புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விஷேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
குறித்த பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு, அதன் அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ள நிலையிலேயே, அந்த அறிக்கை மற்றும் அதில் முன்னெடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்
பிலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துமே ஜனாதிபதி இவ்வாறு விசேட அறிவிப்பை விடுக்கவுள்ளார்.
அதாவது இது தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறி
சேன ஊடகங்களுக்கு விஷேட அறிவிப்பை வெளியிட வுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவும் நேற்று அறிவித்தது.
இதனிடையே பிணை முறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் இன்று சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவுடன் ஜனாதிபதி விஷேடமாக கலந்துரையாடவுள்ளார்.
அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம் எடுக்கத்தக்க அடுத்த கட்ட நடவடிக்கை, சட்ட நுனுக்கங்கள் தொடர்பில் முடிவு செய்வதற்காக இவ்வாறு ஜனாதிபதி சட்ட மா அதிபருடன் கலந்துரையாடவுள்ளதாக உயர் மட்ட தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது.
கடந்த 2015 பெப்ரவரி முதலாம் திகதி முதல் 2016 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட பிணை முறிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியினால் ஜனாதிபதி ஆணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதியர்சர் கே.ரீ. சித்ரசிறி, உயர் நீதிமன்ற நீதியர்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன ஜயவர்தன, முன்னாள் பிரதி கணக்காய்வாளர் நாயகம் வீ. கந்தசாமி ஆகியோரின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.
இந்த விசாரணைகளில் முதல் சாட்சியாக தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் பலரது சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்ட பின்னர் , இந்த பிணை முறி மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் காலப்பகுதியில் நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவின் சாட்சியமும் பதிவு செய்யப்பட்டது.
அந்த சாட்சிப் பதிவுகளின் பின்னர் ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பதவியை துறக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
இதனைவிட இந்த பிணை முறி கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன உயர் அதிகாரிகள், அமைச்சரகளான மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாசிம், ஹர்ஷ டி சில்வா, முன்னாள் மத்த்ய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்டோரின் சாட்சியங்களும் பதிவாகின. இறுதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2017 ஜனவரி மாதம் 27 ஆம் திகதி விசாரணைகளை ஆரம்பித்த இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு, கடந்த 2017 ஏப்ரல் மற்றும் 2017 ஒக்டோபர் மாதங்களில் இரு தடைவைகள் மும்மூன்று மாத கால நீடிப்பை பெற்றது.
இறுதியாக கடந்த 2017 டிசம்பர் 8 ஆம் திகதி அறிக்கை தயார்ச் செய்வதற்காக மூன்று வார கால அவகாசம் பெற்ற ஆணைக் குழுவின் காலம் கடந்த 2017 டிசம்பர் 31 ஆம் திகதி நிறைவுக்கு வந்த நிலையிலேயே 30 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
1400 பக்கங்கள், 100 இணைப்பு ஆவணங்களுடன் 70 பேரின் சாட்சியங்களை இணைத்து தயார் செய்யப்பட்டுள்ள மேற்படி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை பெற்றுக்கொன்ட ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன அன்றைய தினமே, அறிக்கையுடன் தனது சொந்த ஊரான பொலன்னறுவைக்கு சென்றுள்ளார்.
இந் நிலையில் மறு நாள் டிசம்பர் 31 ஆம் திகதி முழு நாளையும் ஒதுக்கி ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன, குறித்த அறிக்கையை படித்துள்ளார்.
இந் நிலையிலேயே அதில் உள்ள விடயங்கள் தொடர்பில் சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்காக ஜனாதிபதி சட்ட மா அதிபரை இன்று விஷேட கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.
அந்தவகையில் அந்த அறிக்கையின் உள்ளடக்கம் மற்றும் அடுத்த கட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.