ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் ஒரு நாளைக்கு 27 பேர் தற்கொலை செய்துக்கொள்வதாகவும், புகார் தெரிவிக்கப்படாத எண்ணிக்கை இதை விட கூடுதலாக இருக்கும் என்ற அதிர்ச்சி புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் தேசிய தற்கொலை மேற்பாவையகம் நேற்று சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
அதில், பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு நாளும் தோராயமாக 27 பேர் தற்கொலை செய்துவருவதாக அதிர்ச்சி தகவலை இணைத்துள்ளது.
குறிப்பாக, கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 9,715 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஆனால், அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்படாத எண்ணிக்கை 10,700 என்ற அளவில் இருக்கும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதாவது, பிரான்ஸ் நாட்டு குடிமக்களில் 5-ல் ஒரு நபருக்கு தற்கொலை எண்ணம் ஏற்படுவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,00,000 லட்சம் பேர் தற்கொலைக்கு முயல்வதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவர்களில் 15 முதல் 20 வயதுடைய பெண்களே அதிகம் என தேசிய தற்கொலை மேற்பாவையகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த அதிர்ச்சி அறிக்கையை படித்த சுகாதாரத்துறை அமைச்சரான Marisol Touraine பேசுகையில், ‘நாடு ஒரு மோசமான சூழலில் போராடி வருகிறது. தற்கொலை எண்ணிக்கையை தடுக்க இனிமேலும் தாமதிக்க கூடாது’ என தெரிவித்துள்ளார்.
ஐரோப்பியாவில் உள்ள 28 நாடுகளில் உள்ள 1,00,000 மக்கள் தொகைக்கு ஒப்பிடுகையில் தற்கொலை செய்துக்கொள்ளும் சரசாரியான 11.7 என்ற சதவிகிதத்தை விட கூடுதலாக பிரான்ஸில் தற்கொலை சதவிகிதம் 16.7 என்ற அளவில் அதிகரித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் விவசாயம் மற்றும் காவல் துறை என இரண்டு துறைகளில் மட்டுமே அதிகளவில் தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. இதில் சிறைகளில் தான் கூடுதலாக தற்கொலை இடம்பெறுகிறது.
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் Technologia என்ற நிறுவனத்தின் இயக்குனர் பேசியபோது, ‘தற்கொலையை தடுக்க பிரித்தானிய நாட்டில் 1950ம் ஆண்டுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், பிரான்ஸ் நாட்டில் இதற்கான முயற்சிகள் 2000ம் ஆண்டில் தான் எடுக்கப்பட்டது. எனவே, தற்கொலைக்கு எதிராக அரசு தீவிரவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.