இரண்டு வயது முதல் 29 வயது வரையான தமது 13 பிள்ளைகளை வீட்டின் கட்டில்களுடன் சங்கிலிகளால் பிணைத்து வைத்திருந்த பெற்றோர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டேவிட் அலன் டேர்பின் (57) அவரின் மனைவியான லூயிஸ்அனா டேர்பின் (49) ஆகிய இருவருக்கும் எதிராக சித்திரவதை மற்றும் பிள்ளைகளுக்கு ஆபத்துக்குட்படுத்தியமை ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தப் பிள்ளைகளில் ஒருவர் 17 வயது யுவதி. குறித்த வீட்டிலிருந்து தப்பிச் சென்று கைத்தொலைபேசி ஒன்றின் மூலம் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து இந்தப் பிள்ளைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் பிள்ளைகள் படுக்கைகளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில் இருக்க கண்டுபிடித்துள்ளனர்.
இப் பிள்ளைகளில் ஏழுபேர் 18 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மிகவும் இளைத்துப் போன நிலையில் அழுக்கேறி காணப்பட்ட 13 பிள்ளைகளையும் பொலிசார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 2010 ஆம் ஆண்டு கலிபோர்னியாவுக்கு இடம்பெயர்வதற்கு முன்னர் இந்தப் பெற்றோர் டெக்ஸாஸ் மாநிலத்தில் வசித்து வந்துள்ளனர்.
டேவிட் அலன் டேர்பின் ஒரு பொறியியலாளராக பணியாற்றி வந்தபோதிலும் பிள்ளைகள் அதிகமாக இருந்ததனால் அவர் நிறைய கடன்பட்டுள்ளார்.
குடும்பத்தில் இவர் மட்டுமே தொழில் செய்து வந்ததால் அவருடைய ஊதியத்தை விட செலவு கையை மீறிவிட்டது. இதனால் அவர் தனது பிள்ளைகளை அவர்களின் படுக்கைகளில் சங்கிலிகளால் பிணைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஐந்து வருடங்களாக டேர்பியின் குடும்பத்தினரைக் காணவில்லை என அவருடைய பெற்றோர் தெரிவித்துள்ளனர். இவர் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக காணப்படும் பல படங்கள் அவருடைய பேஸ் புக்கில் பதிவாகியுள்ளன.
இந்தத் தம்பதியர் குறித்து அயலவர் ஒருவர் கூறுகையில், “அவர்களுடைய வீட்டிலிருந்து எவரும் வெளியே வருவதைக் காணவே முடியாது.
இருவரும் மளிகைக் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிவிட்டு வருவார்கள். அவ்வளவுதான் “என்றார். மற்றொருவர் கூறுகையில் இவர்களின் பிள்ளைகள் ஏன் வெளியே வந்து விளையாடுவதில்லை என்பது குறித்து தான் ஆச்சரியமடைந்ததாக தெரிவித்தார்.