திருச்சி மாநகர போலீஸார் லஞ்சப் பணத்தில் குளிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுவது தொடர்கதைதான். இந்நிலையில், திருச்சி மாநகர உதவி ஆணையர் ஒருவர், லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
காவல்துறை உதவி ஆணையர் அருள் அமரன்
திருச்சி நீதிமன்றம் எதிரே உள்ள ஹீபர் சாலையில், திருச்சி மாநகர போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம், காவல் கண்காணிப்பு மையம் உள்ளிட்டவை உள்ளன.
இந்த வளாகத்தில் உதவி ஆணையர் அலுவலகமும் இயங்கிவருகிறது. இதில், குற்றப்பிரிவு உதவி ஆணையர் அருள்அமரனும் ஒருவர்.
திருச்சி ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த சீதாராமன் என்பவ,ர் திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ள செம்பட்டி ஏரியாவில், தனக்கு சொந்தமாக உள்ள இடம் தொடர்பான பிரச்னைக்காக போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின்மீது நடவடிக்கை இல்லாத காரணத்தால் சீதாராமன், திருச்சி மாநகர காவல் ஆணையரைச் சந்தித்து புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகார், உதவி ஆணையர் அருள் அமரனுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து, உதவி ஆணையர் அருள் அமரன் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் புகாரைக் கொடுத்த சீதாராமனை அழைத்து, தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆனால், அந்தப் பணத்தைக் கொடுக்க மனமில்லாத சீதாராமன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புதுறை போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.
அதன்படி நேற்று இரவு சீதாராமன், உதவி கமிஷனர் அருள்அமரன் அலுவலகத்திற்கு வந்து, அவரிடம் ரூ.50 ஆயிரத்தைக் கொடுத்தார்.
அதை அருள்அமரன் பெற்றபோது, அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் அருள்ஜோதி, சக்திவேல் உள்பட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 10 பேர் அதிரடியாக அந்த அலுவலகத்திற்குள் புகுந்தனர்.
அவர்கள், உதவி ஆணையர் அருள்அமரனை கைதுசெய்து, விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக உதவி ஆணையர் அருள் அமரனின் கிராப்பட்டி வீட்டிலும் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. விசாரணையில் அருள் அமரன் இதுபோன்று பலரிடம் பணம் வாங்கி, பஞ்சாயத்து பேசியதாகவும் தெரியவந்துள்ளது.
திருச்சியில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள், திருச்சியில் இருந்து போக மறுப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக, திருச்சி மாநகரத்தில் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள திருச்சி காந்தி மார்க்கெட், கோட்டை, கண்டோன்மென்ட் பகுதிகளில் பணம் விளையாடும்.
அதனால் இந்தக் காவல்நிலையங்களிலும், சரகத்திலும் பணிசெய்ய போலீஸாருக்குள்ளேயே போட்டி நிலவுகிறது. மேலும், திருச்சி மாவட்டத்துக்குள் பணியாற்றும் பல போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் வேண்டாம் என்று திருச்சியிலேயே பணியாற்றி வருகின்றார்கள்.
மேலும், சட்டத்துக்குப் புறம்பாக லாட்டரி விற்பனை செய்யும் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 11போலீஸார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்கியடிக்கப்பட்டனர்.
இதேபோல திருச்சி காவல்நிலையங்கள், உதவி ஆணையர் அலுவலகங்களில் சட்டத்துக்குப் புறம்பாக பணத்தை வாங்கிக்கொண்டு பஞ்சாயத்து பேசி வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கியுள்ளார், திருச்சி உதவி ஆணையர் அருள் அமரன்.
சிபிஐ போல மாநில அரசில் உள்ள உயர் ரக லஞ்ச பொலிசுகளை கைது செய்ய மத்திய அரசு அணைத்து மாநில போலீஸ் குழுவை உருவாக்க வேண்டும். உள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் THERUVIL நின்று லஞ்ச வேட்டை செய்யும் ட்ராபி…
லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் திருச்சி மாநகர உதவி ஆணையர் கைதுசெய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.