கடந்த வருடத்தில் புகையிரதத்தில் மோதுண்டு 517 பேர் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
புகையிரத குறுக்கு வீதியில் பயணித்த நிலையில், 16 பேரும், புகையிரத கடவையில் வாகனங்களை செலுத்தி விபத்துக்குள்ளானதில் 60 பேரும், தற்கொலை மற்றும் ஏனைய காரணங்களால் 441 பேரும் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புகையிரத குறுக்கு வீதிகளில் சமிக்ஜையை மீறி பயணித்த 134 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, இவர்களிடம் அபராதமாக 154950 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.
மேலும் நாடுபூராகவும் உள்ள புகையிரத குறுக்கு வீதிகளில் கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துதல், புகையிரத கடவைகளில் நடத்தல் போன்ற காரணங்களாலேயே அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த 2016ஆம் ஆண்டு 470 மரணங்கள் சம்பவித்துள்ளதுடன், கடந்த 2017 ஆம் ஆண்டு இதன் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளதாகவும் புகையிரத திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி குறிப்பிட்டார்.