உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை சந்தித்த சுமந்திரன் எம்.பி.
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்மை புனர்வாழ்வு வழங்கி விடுவிக்க வேண்டும் என அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவிப்பதாக அரசியல் கைதிகளை சந்திக்கச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் ஆகியோர் சந்தித்திருந்தனர். இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகள் 8 பேரை நேற்று சந்தித்து அவர்களின் நிலைமை குறித்து அறிந்துகொண்டேன். கடந்த 9 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யக்கோரி தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கு முன்னரும் தமது நிலைப்பாட்டை கடிதம் மூலமாக அவர்கள் அறிவித்திருந்தனர். தம்மை விடுதலை செய்யக் கோரி ஏற்கனவே அவர்கள் முன்வைத்த காரணிகளை கவனத்தில் கொள்ளாத நிலையில் மீண்டும் அவர்கள் கடிதம் மூலமாக தம்மை புனர்வாழ்வுக்குட்படுத்தி விடுவிக்கக் கோருகின்றனர்.
9 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்ற போதிலும் அவர்களின் வழக்குகள் எவையும் இன்னமும் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை எனவும் கூறுகின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்தே நாம் தெரிவித்து வருகின்றோம். ஒரு சிலரை அரசாங்கம் விடுதலை செய்துள்ள போதிலும் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதியளித்தது.
குறிப்பாக ஜனாதிபதி எமக்கு அந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார். எனினும் இப்போது வரையில் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றாது வேறு சில காரணிகளுக்காகவும் தெற்கின் மக்களை சமாளிக்க முடியாமலும் இழுத்தடிப்புகளை செய்து வருகின்றார்.
எனினும் தமிழ் மக்கள் விடயத்தில் அவர் அக்கறை செலுத்த வேண்டும். எதிர்க்கட்சித் தலைவரும் நாமும் தொடர்ச்சியாக அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து அரசாங்கத்திடம் அழுத்தம் கொடுத்து வருகின்றோம். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதே எமது ஒரே நிலைப்பாடு எனக் குறிப்பிட்டார்.