பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராகிய தமது ஓரினச் சேர்க்கை நண்பனை அச்சுறுத்தி அவனிடம் கப்பம் கோரியதாகக் கூறப்படும் இருவர் பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில காலத்துக்கு முன்னர் விடுதியில் ஒன்றாக தங்கியிருந்தபோது, தம்முடன் ஓரினச் சேர்க்கை தொடர்பைப் பேணிவந்த நண்பன், பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதை கேள்வியுற்ற சக ஓரினச் சேர்க்கையாளர்கள் இருவர் மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக, அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் எனவும், தம்முடன் தொடர்ந்தும் தொடர்பை பேணிவருமாறும் குறித்த இளைஞரைச் சந்தேக நபர்கள் இருவரும் தொலைபேசியில் அச்சுறுத்தியுள்ளனர்.
சில நாட்களின் பின்னர் இந்த அச்சுறுத்தலின் அடுத்தக கட்டமாக, தம்முடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டமைக்கான வீடியோ ஆதாரங்கள் காணப்படுவதாகவும், அதனை மணமகள் வீட்டாரிடம் காண்பித்து திருமணத்தை நிறுத்துவதாகவும், அதனைச் செய்யாதிருக்க 10 இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக வழங்குமாறும் சந்தேகநபர்கள் குறித்த இளைஞனை மிரட்டியுள்ளனர்.
தமது நண்பர்களிடம், தனது ஓரினச் சேர்க்கை காட்சிகள் இருப்பதை அறிந்திருந்த மணமகனான இளைஞன், செய்வதறியாது தனக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் தனது நண்பரொருவரிடம் கூறியுள்ளார்.
பின்னர் அவரின் உதவியுடன் இவ்விடயம் குறித்து பண்டாரகம பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய, தனது ஓரினச் சேர்க்கை நண்பர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட குறித்த இளைஞன், தன்னால் 5 இலட்சம் ரூபாவை மாத்திரமே வழங்க முடியும் எனக் கூறியுள்ளார்.
பின்னர் அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவித்து, பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக முச்சக்கரவண்டி ஒன்றில் கடந்த 15 ஆம் திகதி பண்டாரகம நகரத்துக்கு வந்தபோது சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், சந்தேக நபர்கள் வருகைதந்த முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 37 மற்றும் 29 வயதுகளையுடைய பண்டாரகம, ரைகம, உயன்வத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் மரம் வெட்டும் தொழிலாளி எனவும், மற்றையவர் முச்சக்கரவண்டி சாரதி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாட்டாளரான இளைஞரின் பெயரை வெளியிட விரும்பாத பொலிஸார், குறித்த இளைஞன் திட்டமிட்டபடி அடுத்த வாரத்தில் திருமணம் செய்துகொள்ள உள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.