இதுவரை எத்தனையோ கொலைச் சம்பவங்களை கேள்வியுற்றுள்ளோம். ஆனால் பெற்ற பிள்ளைகளே தாய்மாரை அடித்தும், விஷம் வைத்தும் கொல்லும் சம்பவங்கள் ஒரு கணம் நெஞ்சை உலுக்குவதாகவுள்ளது.
பத்து மாதம் பத்தியம் இருந்து, பாலூட்டி, சீராட்டி வளர்த்த தாயை ஈவிரக்கமின்றி கொன்றொழிக்க எவ்வாறு பெற்ற பிள்ளைக்கு மனம் வருகிறதோ என்று பலரும் தலையில் கை வைக்கும் நிலைமையை இன்று காண்கின்றோம்.
அதுவும் மலையகத்தில், தமிழ் மக்கள் மத்தியிலேயே இந்த கொடூரம் தொடர்ந்து வருகின்றது.
அந்த வகையில் இவ்வாரம் “குற்றம்” பகுதியில் இடம்பெறுவது கொத்மலை, பெரட்டாசி தோட்டம், ரஸ்புரூக் பிரிவில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவமாகும்.
இச்சம்பவத்தில் 65 வயதுடைய மாரிமுத்து லக் ஷ்மி என்ற தாயொருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
மாரிமுத்து லெட்சுமிக்கு இரண்டு பெண் பிள்ளைகள், நான்கு ஆண் பிள்ளைகள். இவர்களுக்குள் ஒரு மகன் இறந்து விட் டார்.
ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் தனது இரண்டாவது மகனான குணசேகரனின் பாதுகாப்பிலேயே தனது வாழ் நாட்களின் இறுதி நாட்களை கழித்து வந்துள்ளார்.
குணசேகரன் சிறு வயதிலேயே திருமணமாகி மனைவியை இழந்தவன். அதன்பின் மறு விவாகமும் செய்துகொள்ளாது தனது மகனுடனும், வயதான தாயுடனும் வாழ்ந்து வந்துள்ளான்.
அதிகாலையிலேயே எழுந்து தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்று, பின் மாலை நேரத்தில் அளவுக்கதிகமாக குடித்து விட்டு அயலவர்களை தகாத வார்த்தைகளினால் ஏசுவதை தனது வழக்கமாக கொண்டிருந்தான் குணசேகரன்.
இதனால் அயலவர்கள் யாரும் இவர்களின் வீட்டின் பக்கம் தலை வைத்துப் படுப்பது கூட இல்லை.
இந்த நிலையில் சமீப காலமாக லெட்சுமியின் முகத்தில் பெரிய கட்டியொன்று ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சிறிய முகப்பருவை போல் இருந்தது நாட்கள் செல்ல செல்ல பெரிதாக வளர ஆரம்பித்தது.
லெட்சுமியும் தனக்குத் தெரிந்த நாட்டு மருத்துவங்கள் அனைத்தையும் செய்து பார்த்துள்ளார். ஆயினும் எதுவுமே பயனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பிரபல வைத்தியர்களிடமும் சிகிச்சைகளுக்காக சென்றும் வந்துள்ளார்.
அவர்களும் கட்டி குணமடைய பல்வேறு மருந்து வகைகளை கொடுத்துள்ளார்கள். ஆயினும் கட்டி குணமாகவில்லை. எனவே இறுதியில் இந்த கட்டியை குணமாக்க முடியாதென்று வைத்தியர்கள் கை விரித்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல கட்டியினால் லெட்சுமி பெரிதும் அவதிப்பட்டுள்ளார். அதுவும் பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் நித்திரையின்றி, வலி தாங்க முடியாது பலத்த சத்தத்துடன் கத்திக்கொண்டே இருப்பார்.
இது குணசேகரனுக்கு பெரும் இடையூறாக இருந்துள்ளது. பகல் முழுவதும் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து விட்டு வீட்டுக்கு வந்தாலும் இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லையே என்று புலம்பினான்.
இதனால் லெட்சுமிக்கும் குணசேகரனுக்கும் இடையில் அடிக்கடி முறுகல் நிலைகள் தொடர்வதும், லெட்சுமி கோபித்துக்கொண்டு மற்றப் பிள்ளைகளின் வீட்டுக்கு செல்வதுமாய் இருந்தார்.
ஆயினும் அவள் முகத்தில் காணப்பட்ட கட்டி காரணமாக மூன்று நாட்களுக்கு மேல் எந்தப் பிள்ளைகளின் வீட்டிலும் வயதான லெட்சுமிக்கு இடம் கிடைக்கவில்லை.
எனவே எங்கு சென்றாலும் மூன்று நாட்களுக்கு பின் மீண்டும் குணசேகரனிடமே தஞ்சம் புகுந்துவிடுவார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம், 14ஆம் திகதிகளில் புதுவருட கொண்டாட்டங்கள் காரணமாக விடுமுறையில் வீட்டிலிருந்த குணசேகரன் கசிப்பு, சாராயம் போன்றவற்றை அருந்தி பெரும் அசௌகரியத்துடன் தனது பொழுதை கழித்தான்.
அதன்பின் கடந்த மாதம் 16 ஆம் திகதி சாராயம் வாங்குவதற்காக புசல்லாவை நகருக்கு சென்றவன், வரும்போது சாராயப் போத்தலுடன் வித்தியாசமான இன்னுமொரு போத்தலையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளான்.
எனினும் இது வயதான தாய் லெட்சுமிக்கு தெரியவில்லை தன்னுடைய உயிருக்கு உலை வைக்கத் தான் மகன் விஷப் போத்தலையும் எடுத்து வருகின்றான் என்று.
அதன்படி கடந்த 16ஆம் திகதி இரவு முகத்திலிருந்த கட்டியின் வேதனை காரணமாக சத்தம் போட்டு அழுது கொண்டிருந்த லெட்சுமி அதன் பின்னர் சற்றுக் கண்ணயர்ந்தார்.
அதன்பின் அவள் நித்திரை கொண்டதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட குணசேகரன், விஷத்தை தாயின் வாயில் பருக்க முற்பட்டான்.
இருப்பினும் விஷத்தின் தன்மையினை உணர்ந்த லெட்சுமி கண்விழித்துக் கொள்ள குணசேகரனின் எண்ணம் ஈடேறவில்லை.
எனவே பலாத்காரமாக ஒரு கையால் தாயின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, மறு கையால் விஷத்தை தாய்க்குப் பருக்க முற்பட்டான்.
இருப்பினும் அதுவும் எதிர் மாறாய் நடந்தது. குணசேகரனின் கைகளிலிருந்த விஷக் குப்பி தவறி முழுவதும் நிலத்தில் கொட்டியது.
அதன்பின் லெட்சுமி பலத்த குரலில் சத்தமிட ஆத்திரமடைந்த குணசேகரன், லெட்சுமியின் முகத்திலிருந்த கட்டியை தனது கைகளாலும், கால்களாலும் கொடுரமாக அடித்து சிதைத்தான்.
குணசேகரனின் முகத்திலும், ஆடைகளிலும் கட்டியிலிருந்து வெளியேறிய குருதி பரவியதுன். லெட்சுமி வேதனையால் முனங்கியவாறு நிலத்தில் வீழ்ந்து துடிதுடித்தாள். எனினும் இரக்கமற்ற அந்த மகனின் காதுகளுக்கு தாயின் மரண ஓலம் எட்டவில்லை.
மேலும் மேலும் தாயை சித்திரவதை செய்தாவது கொலை செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவனது குறிக்கோளாகவிருந்தது.
எனவே லெட்சுமியின் தலை முடியைப் பிடித்து, முகத்தை விடாமல் தாயின் உயிர் உடலை விட்டுப் பிரியும் வரை சுவரில் ஓங்கி ஓங்கி அடித்த வண்ணமே இருந்தான்.
ஒருவாறு லெட்சுமியின் உயிர் நிம்மதியின்றியே இவ்வுலகை விட்டுப் பிரிந்தது.
அதன்பின் இரவு முழுதும் இறந்த தாயின் சடலத்துடன் வீட்டிலிருந்திருக்கின்றான்.. இதனிடையே அடுத்த நாள் (17.04.2015) உறவினர் வீட்டிலிருந்த குணசேகரனின் மகன் வீட்டுக்கு வந்தபோது பாட்டி இறந்து கிடந்துள்ளதையும், தந்தை வீட்டின் பின்புறத்தில் காணப்பட்ட மலசல கூடத்தின் அருகில் குழியைத் தோண்டுவதையும், மலசல கூடத்தின் மூடியை திறக்க முற்படுவதையும் அவதானித்துள்ளான்.
இதனால் பீதியுற்ற அவன் அலறியடித்ததால் அயலவர்கள் ஒன்று சேர்ந்து இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து பொலிஸார் குணசேகரனைக் கைது செய்து நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
பின் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள் ளான்.
என்னதான் இருந்தாலும் குடிபோதையில் இருந்து மீண்ட குணசேகரனுக்கு தனது தாயைக் கொடூரமாக கொலை செய்தது சற்று நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.
அதுவும் இல்லாமல் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்தான். இதனால் அவனே அவனுக்கு வழங்கிக் கொண்ட தீர்ப்பாகத்தான் இந்த தற்கொலை யைக் கருத வேண்டும்.
”இதுதான் கலியுகமோ” என்று எண்ணும் அளவுக்கு பெற்ற பிள்ளையே, தனது இரத்தத்தை பாலாக ஊட்டி தாலாட்டி வளர்த்த தாயைக் கொன்றொழிக்கும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தாயொருத்தி பெற்ற பிள்ளைக்கே அஞ்சி வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது.