பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகரில் பொலிஸாருக்கும் போதைவஸ்து கடத்தல்காரர்களுக்குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சமரின்போது காயமடைந்த அப்பாவிப் பெண்ணொருவர் பொலிஸ் காரொன்றால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படக் காட்சிகள் வெளியானதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
4 பிள்ளைகளின் தாயாரான கிளாடியா சில்வா பெரேய்ரா (38 வயது) என்ற மேற்படி பெண் சம்பவ தினம் தனது குடும்பத்தினருக்காக பாண் வாங்குவதற்கு கடைக்குச் சென்றவேளை துப்பாக்கிச் சமரில் சிக்கிக்கொண்டார்.
இதன்போது காயமடைந்த கிளாடியாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அவரை ஏதோ தேவையற்ற பொருளை தூக்கி வீசுவது போன்று தமது வாகனத்தின் பின்பகுதியில் வீசிய பொலிஸார், வாகனத்தை செலுத்திச் சென்றபோது வாகனத்தின் பின்பக்கக் கதவு திறந்துகொண்டதால் அவர் கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில் அவரது ஆடை வாகனத்தில் சிக்கிக்கொண்டதால் அவர் வாகனத்தால் சுமார் 250 மீற்றர் தூரம் வரை தெருவில் உடல் தேய இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பொலிஸார் வாகனத்தை நிறுத்தியபோது கிளாடியா உயிரிழந்திருந்தார். இதனையடுத்து இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 3 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.