தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி நோக்கி “எழுக தமிழ்” பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். வர்த்தக சங்கத் தலைவர் ஜெயசேகரம் அவர்களின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
இதில் தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் அதன் இணைத்தலைவர் மருத்துவர் லக்ஸ்மன், ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மருத்துவர் சிவன்சுதன், பேராசிரியர் சிவநாதன், மருத்துவர் பாலமுருகன் ஆகியோரும் தமிழரசுக் கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிறிதரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தப் பேரணியால் அரசுக்கு நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் இதனை நடத்தாது விடும்படி மாவை சேனாதிராஜா பேரவையினருக்கு புத்திமதி கூறியுள்ளார்.
சுமந்திரனோ ஒரு படி மேலே போய், தமிழ் மக்கள் ஏமாற்றப்படும் வாய்ப்புக்கள் உண்டு. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இவை எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுவிட்டு எவ்வித கருத்துக்களையும் கூறாமல் மாவைக்கும், சுமந்திரனுக்கும் குனிந்து கொடுத்துவிட்டு வந்து விட்டார் சிறிதரன் எம்.பி.
பொதுவெளிகளில் விடுதலைப் புலிகளை விட தேசியம் பேசும் சிறிதரன் எம்.பி பேரவையுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவிக் கதிரை ஆசைக்கு பணிந்து பேசா மடந்தையாக இருந்து விட்டார்.
தமிழ் மக்கள் தொடர்பில் சரியான முடிவெடுக்கும் இடங்களில் பொத்திக் கொண்டிருக்கும் சிறிதரன் எம்.பி தனக்கு வாக்களித்த 70,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இவரது போலித் தேசியம் தமிழ் மக்கள் பேரவையின் அன்றைய சந்திப்பில் தோலுரிக்கப்பட்டு விட்டது.
வெளியில் தமிழ் மக்களை வெறுமனே உணர்ச்சி ஊட்டி விட்டு, தங்கள் உள்ளக சந்திப்புக்களில் எல்லாவற்றையும் விட்டு விட்டு திரியும், சிறிதரனுக்கு இனி எதற்கு வேட்டி?