பெங்களூர்: சிறையில் இருந்து பெங்களூர் எச்.ஏ.எல் விமான நிலையம் வரையிலும் ஜெயலலிதா வாகனம் செல்வதற்காக அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. வி.வி.ஐ.பி அந்தஸ்துடனும், பாதுகாப்புடனும் அவர் ஏர்போர்ட் சென்றார்.
சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அனுமதி வழங்கிய நிலையில், அந்த உத்தரவு பெங்களூர் மத்திய சிறைச்சாலை அதிகாரிகளிடம் கிடைத்த பிறகு நடைமுறைகளை முடித்துக்கொண்டு ஜெயலலிதா ரிலீஸ் செய்யப்பட்டார்.
இதன்பிறகு, சிறை வளாகத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, எச்.ஏ.எல் விமான நிலையத்துக்கு கார் மூலமாக ஜெயலலிதா பயணித்தார்.
இதையடுத்து ஒசூர் சாலையிலுள்ள சிங்கச்சந்திரா, பொம்மனஹள்ளி, மடிவாளா உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இரு பகுதிகளிலும் ஜெயலலிதாவை வாழ்த்தி கட்-அவுட்டுகளை வைத்துள்ளனர் அதிமுக நிர்வாகிகள்.
ஏற்கனவே ஜெயலலிதா இந்த வழக்கில் ஆஜராக வந்தபோதும், தீர்ப்பு தேதியன்று, கோர்ட்டுக்கு ஆஜராக வந்தபோதும் சாலையின் இருபுறங்களிலும் கட்-அவுட் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, எச்.ஏ.எல் விமான நிலையத்திற்கும் அதிமுகவினர் வந்ததால் அங்கும் 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 144 தடையுத்தரவு பிறப்பித்திருந்தனர் பெங்களூர் போலீசார்.
350 போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். ஜெயலலிதா பயணிக்கும்போது சாலையில் வேறு வாகனங்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியிருந்தனர் போலீசார்.
இசெட் பிளஸ் பாதுகாப்புடன் முழு விஐபி பந்தோபஸ்துடன் ஜெயலலிதா விமான நிலையம் சென்றடைந்தார். அதாவது விவிஐபி மரியாதையுடன் போலீசார் அவரை அனுப்பி வைத்தனர்.
முன்னதாக ஜெயலலிதா பாதுகாப்புக்காக சிறையை சுற்றியுள்ள வளாகத்தில் பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தனர்.
மக்கள் மேடை