கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர், தனது மகனை இரக்கமே இல்லாமல், தூக்கி போட்டு மிதித்த வீடியோ ஒன்று சில தினங்களுக்கு முன் வைரலாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் 37 வயதான மகேந்திர குமார் என்பவர், தனது மனைவி மகனுடன் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன், இவர் 10 வயதான தனது மகனை, பெல்ட்டால் அடித்தும், தூக்கி எறிந்து மிதித்தும் சித்தரவதை செய்த வீடியோ வெளியானது.
மகன் பொய் சொல்வதால் கோபத்துக்கு ஆளான தந்தை, இப்படி கொடூரமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இந்த வீடியோவை எடுத்த தாய், அதை வைத்து, பொய் சொன்னால் என்ன நடக்கும் என மகனுக்கு பாடம் புகட்ட திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
மகேந்திர குமார் தனது மொபைலை சர்வீஸ் செய்ய கடையில் கொடுத்த போது, அந்த கடை பணியாளர் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்து, அதை இணையதளத்தில் லீக் செய்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவை பார்த்து பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, போலீசார் குமாரை கைது செய்தனர்.