அருப்புக்கோட்டை அருகே காதல் தகராறில் கழுத்தை நெரித்து மகளை கொலை செய்துவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணற்றை சேர்ந்தவர்கள் ராஜாகனி- ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி தம்பதியினர்.
தனியார் மில்லில் வேலை பார்த்து வரும் இவர்களுக்கு அபிநயா என்ற மகளும் உள்ளார். அவர் மல்லாங்கிணற்றிலுள்ள ஒரு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், அபிநயா அப்பகுதியில் உள்ள ஒரு வாலிபருடன் பழகியதாகக் கூறப்படுகிறது.
இதனையறிந்த அவரது தாய் ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி தனது மகள் அபிநயாவை கண்டித்துள்ளார்.
அப்போது தாய்க்கும் மகளுக்கும் வாக்குவாதம் அதிகரித்து தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தத் தகராறில், அபிநயாவின் கழுத்தை ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி நெரித்ததாகவும் அதில் அபிநயா உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் பதட்டமும் மனவேதனையும் அடைந்த ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி வீட்டினுள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி தகவலறிந்த வந்த மல்லாங்கிணறு காவல்துறையினர், ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டில் தாய், மகள் இருவரது சடலங்களும் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் விசாரணையில் அவரது கணவர் ராஜாகனி மற்றும் உறவினர்கள் காவல்துறையினருக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக இருவரது உடல்களையும் புதைக்க திட்டமிட்டது தெரிய வந்தது.
இருவரது சடலங்களையும் ராஜாக்கனியின் சொந்த ஊரான மீனாட்சிபுரத்திற்குக் எடுத்துச் சென்றது தெரிந்தது. இதைனையடுத்து மல்லாங்கிணறு காவல்துறையினர் அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் திருச்சுழி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் மீனாட்சிபுரத்திற்கு விரைந்து சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உயிரிழந்த இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கணவர் ராஜாகனியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே மகளைக் கொலை செய்து தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.