மட்டக்களப்பு பகுதியில் மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மட்டகளப்பு மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு ஜீன் மாதம் 11ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பகுதியை சேர்ந்த சீனிதம்பி வசந்தராசா என்பவர் தனது மகளை பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தியிருந்தார்.
இது தொடர்பாக நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டு சட்டமா அதிபரால் குறித்த நபருக்கு எதிராக மட்டகளப்பு மேல்.நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ் வழக்கை அரச சட்டவாதி நாகரட்சம் நிஷாந் நெறிப்படுத்தியிருந்தார்.
இவ் வழக்கில் வழக்கு தொடுநர் தரப்பால் 12 சாட்சியங்கள் அழைக்கப்பட்டு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இவ்வாறு இடம்பெற்ற வழக்கு விசாரணைகள் முடிவடைந்து இன்றைய தினம் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்ததுடன் 5 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் அதனை செலுத்ததவறின் ஆறு மாத சிறைத் தண்டனையும் விதித்து மட்டகளப்பு மேல்.நீதிமன்ற நீதிபதி எம்.வை.என்.இர்ஸதீன் தீர்ப்பளித்தார்.