இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், அவரது மருமகன் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன அலோசியஸ், அந் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலியசேன ஆகியோர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு பிறப்பித்தது.
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விநியோக நடவடிக்கையின் போது, வெளிப்படுத்த முடியாத நிதி தொடர்பிலான இரகசிய தகவல்களை, மத்திய வங்கியின் சில பிரிவினர் வழங்கியுள்ளார்களா என விசாரணை ஒன்றினை நடாத்துமாறு மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கடந்த 2016.11.25 அன்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அந்த விசாரணையின் பிரகாரம் இந்த உத்தரவு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவினால் பிறப்பிக்கப்பட்டது.
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், அவரது மருமகன் பேப்பச்சுவல் ட்ர்சரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன அலோசியஸ், அந் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் இந்த விவகாரத்தில் சந்தேக நபர்களாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெயரிடப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக 7 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டுக்கள்:
இலங்கை அரசுக்கு தேவையான கடன் தொகையை குறைந்த செலவில் பெற்றுக்கொண்டு அந்த கடன் தொகையை அரசுக்கு கொடுக்க கடமைப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரியான அது தொடர்பில் பூரண அறிவுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்துகொண்டு லக் ஷமன் அர்ஜுன் மகேந்திரன் வஞ்சகமான முறையில் அந்த கடன் தொகையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து அந்த தொகையை சட்ட விரோதமாக பயன்பாட்டுக்கு எடுத்தமை ஊடாக திட்டமிட்டு நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்.
இது 1988 ஆம் ஆண்டின் 76 ஆம் இலக்க, 1999 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட குற்றமாகும். அத்துடன் இது தண்டனை சட்டக் கோவையின் 389,381 இன் கீழும் குற்றமாக கருதப்படுகின்றது.
2. சட்ட விரோத பயன்பாடு எனும் குற்றம் பொதுச் சொத்தான அரச பணம் தொடர்பில் புரியப்பட்டுள்ளதால், மத்திய வங்கி ஆளுநராக இருந்துகொண்டு லக் ஷ்மன் அர்ஜுன் மகேந்திரன் 1988 ஆம் ஆண்டில் 76 ஆம் இலக்க மற்றும் 1999 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க மற்றும் 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் புரியப்பட்ட குற்றம் எனும் அடிப்படையில் அதன் 5(1) ஆம் அத்தியாயத்தின் கீழ் கூறப்படும் தண்டனை சட்டக் கோவையின் 386 ஆவது அத்தியாயத்தின் கீழான குற்றமாகும்.
3. முதல் இரு குற்றங்களைப் புரிய சதி செய்தல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்திரன், பெப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வமற்ற பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர், பேப்பச்சுவல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான அர்ஜுன் ஜோசப் அலோசியஸ், ஆகியோரால் 1988 ஆம் அண்டின் 76 ஆம் இலக்க, 1999 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளனர். அச்சட்டத்தின் 5(1) ஆம் அத்தியாயத்தின் படி அக்குற்றம் தண்டனை சட்டக் கோவையின் 389/391 ஆம் அத்தியாயத்தின் கீழ் குற்றமாகும்.
4.1ஆம், 2 ஆம் குற்றங்களை புரிய ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் பெப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வமற்ற பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர், பேப்பச்சுவல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான அர்ஜுன் ஜோசப் அலோசியஸ், அந் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பலிசேன அப்புஹாமிலாகே கசுன் பலிசேனவும் தண்டனை சட்டக் கோவையின் 102, 389/381 ஆம் அத்தியாயத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளனர்.
5. 2015 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற பிணை முறி ஏலத்தின் போது கேள்விமனு தொடர்பில் தீர்மானிக்கும் போதும் இரகசிய நிதித் தகவல்களை உள்ளடக்கியதான அதனுடன் தொடர்புபட்ட விடயங்களின் போதும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்திரன் பெப்பச்சுவல் ட்சரீஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வமற்ற பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர், பேப்பச்சுவல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான அர்ஜுன் ஜோசப் அலோசியஸ், அந் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பலிசேன அப்புஹாமிலாகே கசுன் பலிசேன ஆகியோரும் 1937 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க சட்டத்தின் 56 அ (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளனர்.
6. 5 ஆவது குற்றத்தை புரிவதற்காக இலங்கை மத்திய வங்கி ஆளுநராக இருந்த லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்திரன், பெப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வமற்ற பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் , பேப்பச்சுவல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான அர்ஜுன் ஜோசப் அலோசியஸ், அந் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பலிசேன அப்புஹாமிலாகே கசுன் பலிசேனவும் உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் தண்டனை சட்டக் கோவையின் 113 ஆ அத்தியாயத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளனர்.
7. 5 ஆவது குற்றத்தை புரிய உதவியமை ஊடாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்திரன் பிணையங்கள் சட்டத்தின் 56 அ(1) கீழ் குற்றமிழைத்துள்ளார் என ஏழு குற்றச்சாட்டுக்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு சுமத்தியுள்ளது.
இந் நிலையிலேயே இது தொடர்பில் ஆராய்ந்த கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முதல் சந்தேக நபரான மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்திரன், பெப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வமற்ற பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் , பேப்பச்சுவல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான அர்ஜுன் ஜோசப் அலோசியஸ், அந் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பலிசேன அப்புஹாமிலாகே கசுன் பலிசேன ஆகியோர் விசாரணைகளுக்கு ஒத்துழைக்காது நாட்டை விட்டு செல்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற, உள் நுழைய முடியுமான அனைத்து விமானநிலையங்கள், துறைமுகங்களுக்கும் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 124 ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் பயணத் தடை விதித்து உத்தரவிட்டார்.
அத்துடன் சட்டவிரோதமாக சம்பாதித்துள்ள 9147000000ரூபா நிதியை பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கோ அல்லது அதனுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றுக்கோ பரிமாற்றுவதையும் தடை செய்து உத்தரவிட்டார்.
அத்துடன் பிணை முறி கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்குமாறும், நீதிமன்ற அனுமதியின்றி பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பணம், சொத்துக்கள் பறிமாற்றல், பரிசாக வழங்கல், வேறு கணக்கில் வைப்பிலிடல் உள்ளிட்ட அனைத்து கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளையும் நீதிவான் தடை செய்து உத்தரவிட்டார்.
இந் நிலையில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்திரன் தற்போது சிங்கப் பூரில் உள்ளதாக உளவுத் தகவல் கிடைத்திருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்ததையடுத்து, அவர் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்கு மூலம் வழங்க வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவிட்டார்.
அத்துடன் 2015.2.27 முதல் அந் நிறுவனம் செயலிழக்கச் செய்யப்படும் வரை பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடம் இருந்த சொத்துக்கள் மற்றும் பணம் தொடர்பில் கணக்காய்வாளர் ஒருவர் ஊடாக உறுதிப்படுத்தி அறிக்கை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட மன்றில் ஆஜராகி கருத்துக்களை முன்வைத்த நிலையிலேயே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.