மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தன்குமாரவெளி ஆற்றில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த வேளை விசேட அதிரடிப்படையினர் விரட்டியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஆற்றில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை (24) பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கொம்மாதுறை 10 கட்டை வீதியைச் சேர்ந்த சதாகரன் மதுஷன் (வயது 17) என்ற இளைஞன் உயிழந்ததுடன், அவரது சகோதரனான சதாகரன் கிஷாந்தன் (வயது 18) வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முந்தன்குமாரவெளி ஆற்றிலிருந்து உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த வேளை அப்பகுதிக்கு வந்த விசேட அதிரடிப்படையினர் மணல் ஏற்றியவர்களை விரட்டி வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.
இதனால் அங்கு மணல் அகழ்ந்துகொண்டிருந்தவர்கள் தப்பியோடியுள்ளனர்.
குறித்த சகோதரர்கள் இருவரும் ஆற்றில் குதித்து தப்பியோட முயற்சித்த வேளை, ஆற்றின் நீர் மட்டம் அதிகம் காணப்பட்டதால் நீரில் மூழ்கியுள்ளனர்.
அதையடுத்து அருகில் இருந்தவர்களினால் மீட்கப்பட்டு, செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலைக்கு கொண்டுவருவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே சதாகரன் மதுஷன் உயிழந்துள்ளதாக வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் து.பரமானந்தராஜா தெரிவித்தார். மற்றையவர் அதிர்ச்சியிலுள்ளதாகவும் சிகிற்சையளிக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.