இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் விவசாயி ஒருவர், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக மனைவி சிலைக்கு பூஜை செய்து வருகிறார்.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் எல்லந்தூர் தாலுகாவில் உள்ள கிருஷ்ணபுரா கிராமத்தை சேர்ந்தவர் ராஜசாமி, விவசாய கூலி தொழிலாளி. மேலும் விவசாயமும் செய்து வந்தார். இவரது மனைவி ராஜம்மா.
ராஜசாமிக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு தனது மனைவி ராஜம்மாவுக்கு கோவில் கட்டி, கோவிலில் மூல விக்ரகமாக ராஜம்மாவை சிலை வைத்துள்ளார்.
இக் கோவிலில் சிவன், நவக்கிரகங்கள், சனீஸ்வரர், சித்தப்பாஜி ஆகியோரது சிலைகளும் உள்ளன.
இந்தக்கோவில் கட்டியது குறித்து ராஜசாமி கூறியதாவது,
“நான் எனது சகோதரி மகளான ராஜம்மாவை காதலித்து மணந்தேன். எங்களது காதலுக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டோம்.
எனது சகோதரியையும், அவரது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ராஜம்மாவை மணந்து கொண்டேன்.
எனது மனைவி தனக்கு கோவில் கட்டுமாறு கூறினார். கோவில் கட்டவும் உறவினர்களும். கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். நான் அவர்களது எதிர்ப்பை மீறி 2 ஆண்டுகள் கஷ்டப்பட்டு இந்தக்கோவிலை கட்டினேன்.
பின்னர் எனது மனைவி இறந்து விட்டார். எங்களது காதல் தெய்வீக காதல் என்பதால் எனது மனைவியின் விருப்பத்தை பூர்த்தி செய்தேன்.
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக எனது மனைவி சிலைக்கு பூஜை செய்து வருகிறேன். இந்தக்கோவிலை பக்கத்து கிராமங்களில் இருந்து வந்தும் மக்கள் பார்த்து செல்கிறார்கள்” என்று கூறினார்.