மன்னார் இலுப்பைக் கடவை பிரதேசத்தில் வைத்து சொகுசு வாகனம் ஒன்றில் 164.3 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட ஆயுதகுழு ஒன்றைச் சேர்ந்தவரும் கிழக்கு மாகாண சபையின் அம்பாறை மாவட்ட முன்னாள் உறுப்பினர் இனிய பாரதியும் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர் இருவரையும் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதவான் எம். கணேசராஜா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
மன்னார் இலுப்பைக்கடவை வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் கடற்படையின் வீதி சோதனை சாவடி ஊடாக கடந்த 19 ஆம் திகதி சொகுசு வாகனம் ஒன்று செல்ல முற்பட்ட போது அதனை கடற்படையினர் நிறுத்துமாறு சமிக்கை காட்டிய போது அதனை மீறி வாகனம் சென்றபோது கடற்படையினர் வாகனம் மீது துப்பாக்கிச் பிரயோகம் செய்து குறித்த வாகனத்தை மடக்கிப் பிடித்தனர்.
இதனையடுத்து குறித்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதிகளில் 164.3 கிலோ கிராம் கஞ்சாவை மீட்டதுடன் அந்த வாகனத்தை செலுத்திச் சென்ற கிழக்கு மாகாண சபையின் அம்பாறை மாவட்ட முன்னாள் உறுப்பினர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர் இருவரையும் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை இரண்டு நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்த பின்னர் செவ்வாய்க்கிழமை மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இருவரையும் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.