இந்த அடிப்படைவாத நிகழ்ச்சி நிரலிலிருந்து தமிழரசுக் கட்சியின் அரசியல் மாறிச் செல்கிறது என்பதாலும், அதுவே 21ம் நூற்றாண்டின் அரசியல் பாதையாக அமையும் என்பதாலும் அப் பாதையைப் பலப்படுத்துவது ஜனநாயக சக்திகளின் தலையாய பணி ஆகிறது.
இக் கோட்பாடுகளில் தமிழரசுக் கட்சி எவ்வளவு தூரம் நம்பிக்கை கொண்டிருக்கிறது? என்பது கேள்விக்குரியது.
எனினும் பாதை மாற்றம் அவசியமான ஒன்றே. இந்த மாற்றமே புதிய பாதைக்கான அடிப்படைகளாக அமைய முடியும்.இதனையே பல ஜனநாயக சக்திகள் நீண்ட காலமாக கோரி வந்தன.
உதாரணமாக வழிகாட்டுக் குழுவின் அறிக்கை தொடர்பான அரசியல் அமைப்பு சபை விவாதத்தில் இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் கவனத்திற்குரியன.
இலங்கையின் இறைமை குறித்துத் தெரிவிக்கையில், தற்போதைய அரசியல் அமைப்பு வரைபு தொடர்பாக நாட்டு மக்கள் தமது இறைமை அதிகாரத்தைப் போதிய அளவில் பயன்படுத்தி உள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாட்டு மக்கள் இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டனர். அரசியல் அமைப்பு என்பது நாட்டின் முதன்மைச் சட்டமாகும்.
எனவே இச் சட்டமானது பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத இலங்கை என்பதை உறுதி செய்கிறது. இந்த மாற்றத்திற்குப் பிரதான காரணம் கடந்த 70 ஆண்டுகால அனுபவம் என்கிறார்.
எனவே தற்போது கூட்டமைப்பினர் அரசியல் அமைப்பு வரைபில் ஈடுபடுவதும், இலங்கை என்பது பிரிக்கமுடியாத, பிரிக்கப்படாத நாடு என ஏற்றுக் கொள்வதும் தற்செயல் சம்பவங்கள் அல்ல.
இக் கட்சியே தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றினை எடுத்துச் சென்றது. இக் கட்சியையே தமிழ் மக்கள் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்கள்.
இக் கட்சியே தமிழ் மக்கள் தரப்பில் பேசியது. இக் கட்சியுடன்தான் சர்வதேச அரசுகள் பேசின. அந்த நீண்ட அனுபவத்தின் பின்னணியில் தற்போது அதன் அரசியல் பாதையை தனக்கே உரித்தான வகையில் மாற்றிக்கொண்டுள்ளது. இந்த யதார்த்தத்தினை ஏற்றாக வேண்டும்.
நாட்டின் எதிர்கால வாழ்வு பற்றி அவர் தெரிவிக்கையில் பல்வேறு வகைகளில் நாடு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், இதிலிருந்து மீள்வதற்கும், முன்னேற்றம் அடைவதற்கும், உலகில் காத்திரமான இடத்தைப் பிடிப்பதற்கும் சகல மக்களும் சமத்துவத்துடனும், நீதியுடனும் ஐக்கியமாக வாழ்வது அவசியம் என்பதை சகலரும் உணர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
இலங்கைத் தேசத்தின் பிரஜை என்ற வகையில் அதன் பொருளாதார, சமூக வாழ்வை உயர்த்துவதற்கு சகலரும் ஐக்கியமாக உழைக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர் அதற்கு முன் நிபந்தனையாக சமத்துவத்தையும், நீதியையும் நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்.
இத்தகைய அணுகுமுறை கடந்த காலத்தில் தமிழரசுக் கட்சியிடம் அல்லது கூட்டமைப்பிடம் இருந்ததில்லை. அதுவே தற்போது இந்த அடிப்படைவாதிகளிடமும் இல்லாமலுள்ளது.
இன்று இலங்கையிலுள்ள இனவாத அரசியல் இலங்கை என்பது பல்லினங்கள், பல மதங்கள் வாழும் நாடு என்பதை ஏற்க மறுத்து வருகிறது.
அதே போலவே இந்த அடிப்படைவாதிகளும் ஒட்டு மொத்த இலங்கையின் அடிப்படைகளை வரையறுக்க மறுத்து வருகின்றனர். ஏனெனில் அவர்களின் கருத்தப்படி தமிழ் தேசம் வேறு, சிங்கள தேசம் வேறு என்ற இறுக்கமான நிலைப்பாடு ஆகும்.
சுதந்திர காலம் முதல் இற்றை வரை தமிழ் மக்கள் ஒருமித்த நாட்டிற்கான பாராளுமன்றத் தேர்தலை நிராகரித்ததில்லை.
தேசிய பொருளாதாரத்தில் பங்கேற்பதிலிருந்து தம்மை விலக்கிக் கொண்டதில்லை. அவர்களின் முதலீடு தற்போது தென்னிலங்கையில் அதிகரித்துள்ளது. இந் நிலையில் ஒட்டு மொத்த இலங்கை குறித்துப் பேச மறுத்து வருவது அடிப்படைவாதமே தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
புதிய அரசியல் வரைபுகள் குறித்து தெரிவிக்கையில் இலங்கை என்பது பல்லின மக்களும், பல மதங்களும் உள்ள பன்மைத்துவ சமூகத்தை உடைய நாடு என வரையறுக்கிறார்.
முதலில் இலங்கை என்பது பிரிக்க முடியாத, பிரிக்கப்படாத நாடு என வரையறுத்தவர் அதன் பின்னர் அந்த நாடு பல்லினங்கள் வாழும் பன்மைத்துவ சமூகத்தை உடையது என்கிறார்.
புதிய யாப்பு யோசனைகள் ஜனநாயகமும், வாக்குப் பிரயோகமும் இணைந்து செல்வதன் மூலமே பிளவுபடாத பன்மைத்துவத்திற்கு அர்த்தமும், மரியாதையும், அங்கீகாரமும் தருவதாக குறிப்பிடுகிறார்.
பெரும்பான்மை என்பது வாக்குப் பலம் மட்டுமல்ல அது ஜனநாயகமும் நிறைந்ததாக இருத்தல் அவசியம் எனக் கூறி பெரும்பான்மை வாக்கு மட்டும் ஜனநாயகமாக அர்த்தப்படாது என்கிறார்.
ஜனநாயகமும்,பன்மைத்துவமும் ஒன்றிணைந்து செல்வதோடு அவை அரச கட்டுமானங்களில் பலப்படுத்தப்பட்டு நீதியையும், சமத்துவத்தையும் வழங்க வேண்டும் என்கிறார்.
இப் பின்னணியில் விக்னேஸ்வரனின் உரைகளைப் பார்க்கலாம். தாம் தலைமை தாங்கும் தமிழ் மக்கள் பேரவை என்பது மக்கள் இயக்கம் என வரையறுக்கும் அவர் இந்த இயக்கமானது பிரதேசம், மாகாணம் என வேற்றுமை பாராட்டாது அனைவரையும் உள்ளடக்கிய சிந்தனையை மேற்கொண்ட தமது அரசியலை முன்னெடுக்கும் என்கிறார்.
ஆனால் அவர் கட்சிகள் பற்றித் தெரிவிக்கையில் கட்சி அரசியல் என்பது குறுகிய, கட்சி நலன் கருதியே அவர்கள் தேர்தல் முடிவுகளை எடுப்பதாக கூறுகிறார்.
தமது இயக்கத்திற்கும், கட்சிகளுக்கும் இடையேயுள்ள இடைவெளி எதுவெனில் கட்சிகள் கட்சி நலன்களின் அடிப்படையில் தேர்தல் முடிவுகளை எடுக்க, தமது இயக்கம் பொது நலன்களின் அடிப்படையில் வேறுபாடுகளுக்கு அப்பால் முடிவுகளை எடுப்பதாக நியாயம் கூறுகிறார்.
இந்த விளக்கத்தின் பின்னால் ஒரு சூழ்ச்சி உள்ளது. இந்தக் கட்சிகளால் தனித்துப் போட்டியிட முடியாது. எனவே அவர்கள் ஒன்றாக இணைந்தேபோட்டியிட முடியும். அதற்கான பொதுத் தளமாகவே அவரது பேரவையை மாற்றுகிறார்.
தம்மை அதன் நாயகராக நிறுத்துகிறார். கட்சிகளின் நலனுக்கும்,பேரவையின் நலனுக்கும் இடையேயுள்ள பொது நலன் என்பது தேர்தலே தவிர வேறு எதுவும் இல்லை.
அவர் தனது கற்பனையில் சில எதிரிகளை உருவாக்கி அவற்றுடன் தனது போரை ஆரம்பிக்கிறார்.
அரசாங்கம் தருவதைத் தரட்டும். எம் மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நிலை மாறி எவற்றை எம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்? அவற்றிற்கு இசைவாகவே நாம் எமது அரசியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற சிந்தனை பேரவையினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனப் பெருமிதம் கொள்கிறார்.
அவரைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களின் கடந்த கால அரசியல் தருவதைத் தரட்டும் என்ற அரசியலை நடத்தியதாகவே அவரது அரசியல் புரிதல் உள்ளது.
அவ்வாறானால் அரசாங்கம் தருவதைத் தரட்டும். தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் எனக் கருதிய போக்கு எப்போது காணப்பட்டது? இதனை யார் நம்பினார்கள்? என்பதை அவர் தெளிவாக்க வேண்டும்.
அவ்வாறான போக்கு தமிழ் அரசியலில் ஒரு போதும் காணப்பட்டதில்லை. அரசு தாமாக விரும்பித் தர முயன்றதாக அரசியல் வரலாறு இல்லை. கிடைத்தவை யாவும் பலமான அழுத்தங்களின் விளைவுகளாகும். இதனைப் பரிந்து கொள்வதற்கு அவரது அரசியல் அனுபவம் போதவில்லை என்றே நாம் கொள்ள வேண்டியுள்ளது.
அரசு தர முன் வருவதற்கும், எமது எதிர்பார்ப்புகளுக்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளதால் அரசு குறைத்துத் தருவதை ஏற்றுக் கொண்டால் எமது இலக்குகளை அடைய முடியாமல்போய்;விடும் என ஆதங்கப்படுகிறார்.
ஏனெனில் அவரது வாழும் காலத்திலேயே பட்டு வேட்டி கட்டலாம் என நம்புகிறார். இது கற்பனை என அழைப்பதை விட வேறு எதுவாக இருக்க முடியும்?
நாம் பட்டு வேட்டிக்கு ஆசைப்படுகிறோம். அவர்கள் கோவணங்களைத் தந்தால் பட்டு வேட்டி கிடைக்காமல் போய்விடும்என அவர் ஆதங்கப்படுகிறார்.
இது மக்கள் மீதுள்ள அவ நம்பிக்கையின் வெளிப்பாடாகும். மக்கள் தருவதை வாங்கத் தயாராக இருப்பதாக எண்ணுகிறார்.
தமிழ் மக்கள் கடந்த 70 ஆண்டுகளாகப் போராடிய வரலாறு அவருக்குத் தெரிய நியாயமில்லை. அதன் காரணமாகவே இருக்கிற கோவணத்தைப் பறிகொடாமல் இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், பட்டு வேட்டி பற்றி கனவு காண்கிறார். மக்கள் கட்டிய கோவணத்தைப் பாதுகாப்பதே பிரச்சனையாக உள்ள நிலையில் பட்டு வேட்டி பற்றி சிந்திக்க நேரமேது.
எமது உரிமைகள், உரித்துகளைப் பறித்த பெரும்பான்மையினர் தாம் நினைத்தவாறு மாற்றங்களை எற்படுத்தி சலுகைகளை, உரிமைகளை தருவதாக இருந்தால் நாம் ஆட்சேபனை இல்லாமல் ஏற்கிறோம் எனக் கூறவேண்டிய அவசியமில்லை என்கிறார்.
இதுவும் அவரது கற்பனையில் உதித்த ஒன்று. நீதியும், சமத்துவமும் கைகோர்த்துச் செல்லும் அரசியலையே தமிழ் அரசியல் தொடர்ந்து வற்புறுத்திச் சென்றது. தமது அடிப்படைக் கோரிக்கைகளில் விட்டுக் கொடுக்காமல் போராடியே சென்றது.
தாம் குறைவாக தருவதை நாம் ஏற்றுள்ளோம் என்ற அடிப்படையில் இனிமேல் எதுவும் தரவேண்டிய அவசியம் தமக்கில்லை என அரசு நினைக்கும் வகையில் நாம் செயற்படக் கூடாது என்கிறார்.
முதலமைச்சரின் கற்பனை வளம் மிகப் பிரமாதமானது. தாம் குறைவாகத் தருவதைத் தமிழ் மக்கள் ஏற்றுள்ளார்கள் என அரசு எண்ணி தர வேண்டியதைத் தராமல் விட்டுவிடும் என்கிறார்.
இலங்கை அரசியலில் அவ்வாறான அதிசயம் நடந்ததும் இல்லை. நடக்கப் போவதும் இல்லை. அவ்வாறான அத்தியாயம் ஒருபோதும் இருந்ததில்லை. அவ் வரலாறு முதலமைச்சருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனெனில் அவர் நாட்டில் நீதியைப் பரிபாலிப்பதில் கண்ணாக இருந்தார்.
அவரது சிந்தனைகள் யாவும் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டதாக ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கி அதனைத் தோற்கடிப்பதற்காகவே தாம் அவதாரம் எடுத்துள்ளதாக அவரது போதனைகள் புதிய வழியில் செல்கின்றன.
தமிழ் மக்கள் தமது சுய நிர்ணய உரிமையை தொடக்கத்திலிருந்தே பெற்றிருந்தார்கள் என்ற உண்மையைத் தட்டிக் கழிக்கப் பார்க்கிறார்கள்.
ஆகவே அதிகார பரவலாக்கம் என்பது பல்லினங்களின் ஒப்புதலோடு நடைபெற வேண்டுமே தவிர பெரும்பான்மையினரிடமிருந்து எமக்குத் தரப்படும் அவர்களின் கொடைச் சிந்தனையின் வெளிப்பாடாக இருக்க முடியாது என்கிறார் முதலமைச்சர்.
தேசிய இனப் பிரச்சனையில் பெரும்பான்மையிடம் கொடைச் சிந்தனை காணப்படுவதாகவும், அவ்வாறான சிந்தனையிலிருந்து கிடைப்பது எமக்குத் தேவையில்லை.
ஆனால் பல்லினங்களின் ஒப்புதலோடு கிடைப்பதையே நாம் பெற்றுக் கொள்வோம் என்கிறார். தேசிய இனப் பிரச்சனையில் சிங்கள அரசியல் சக்திகள் மத்தியில் கொடைச் சிந்தனை இருப்பதாக அல்லது இருந்ததாக அவர் காண்கிறார். இது கொடைச் சிந்தனை அல்ல.
தமிழ் மக்கள் சிந்திய ரத்தத்தால் ஏற்பட்ட சிறிய விளைபொருள். இதன் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ள முதலமைச்சருக்கு அரசியல் ஆயுள் போதாது.
வாசகர்களே!
தமிழ் அரசியல் தற்போது அடிப்படை வாதமாகவும், யதார்த்த வாதமாகவும் கூறுபட்டுச் செல்கிறது. இங்கு கூட்டமைப்பு என்பது மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அமைப்பு.
அதனையே தமிழ் மக்கள் தமது சார்பில் பேச பாராளுமன்றம் அனுப்பினார்கள். அக் கட்சி தனது ஜனநாயகக் கடமையைச் செய்ய நாம் வழி விட வேண்டும்.
அக் கட்சி மக்களுக்குத் துரோகம் இழைத்தது எனக் கருதினால் அடுத்த தேர்தலில் அக் கட்சியை நிராகரிக்கவும், அதே வேளை புதிய அரசியலைத் தேர்வு செய்யவும் வாய்ப்பு உண்டு. அதை விடுத்து பட்டு வேட்டி அரசியலை நடத்துவது ஏமாற்று அரசியலாகும்.
தேசிய இனப் பிரச்சனையைத் தீர்க்க அதாவது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான மாற்றுத் தேர்வு பற்றி முதலமைச்சர் தரப்பினர் முன் வைக்க வேண்டும்.
அதை விடுத்து அரசியல் அமைப்பு பிரச்சனைகளின் இடைநடுவில் கூட்டமைப்பு இருக்கும் போது அதன் முயற்சிகளை சிதைக்கும் விதத்தில் உள்ளுராட்சித் தேர்தல்களை கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு எதிரான வாக்கெடுப்பாக மாற்ற முனைவது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் தேசத் துரோகமாகும்.
நூட்டில் ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படத்துவது தொடர்பாகவும், தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பது தொடர்பாகவும், தேசிய நல்லிணக்கம் தொடர்பாகவும் மிகவும் காத்திரமான முயற்சிகள் நடைபெறும் வேளை அடுத்த 25 ஆண்டு காலத்தில் எமது சமூகத்தின் அரசியல், சமூக, பொருளாதார வாழ்வு எவ்வாறு அமைய வேண்டும்?
அதற்கு ஏற்றவாறு மாற்றத்தை ஏற்படுத்த பேரவையோ அல்லது கூட்டமைப்போ அல்லது தழிழரசுக் கட்சியோ தயாராக உள்ளதா? அவ்வாறு இல்லையெனில் மாற்று வழி என்ன? அதற்கான களமே தற்போது திறக்கப்பட்டுள்ளது.
(முற்றும்)
email: vsivalingam@hotmail.com