ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
மருமகளுடன் இருந்த கள்ளத் தொடர்பால் அவருக்கு சொத்தை எழுதிவைத்துவிடுவார் என்ற பயத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரியபாளையம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகேயுள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் வசித்தவர் கதிர்வேல் என்ற அம்மாகண்ணு (71). இவர் அரிசி வியாபாரி. இவரது மனைவி விஜயலட்சுமி (65). இவர்களது மகன் கண்ணப்பன் (38). இவருக்கு வாய் பேச முடியாது. இவரது மனைவி சித்ரா (32). இவர்களுக்கு ஸ்ரீமதி (8) என்ற மகள் இருக்கிறாள்.
கதிர்வேலுக்கு நிறைய சொத்துக்கள் இருப்பதாக தெரிகிறது. மகனுக்கு வாய்பேச முடியாது என்பதால் சொத்துக்களை மருமகள் பெயருக்கு எழுதிவைக்க முடிவு செய்தாராம்.
மேலும் மருமகளுடன் கதிர்வேலுவுக்கு கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. கணவரின் இந்த செயலுக்கு விஜயலட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுசம்பந்தமாக அடிக்கடி தம்பதி இடையே தகராறு ஏற்படும்.
இந்நிலையில், கண்ணப்பனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சித்ரா, குழந்தையுடன் அழிஞ்சிவாக்கத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். கடந்த ஐந்து வருடமாக அங்குதான் அவர் வசித்து வருகின்றார்.
மருமகளை பார்க்க கதிர்வேல் அடிக்கடி அங்கு சென்றுள்ளார். இது விஜயலட்சுமிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு சொத்து பிரச்னை மற்றும் கள்ளத் தொடர்பு சம்பந்தமாக கதிர்வேலுவுக்கும் விஜயலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்பிறகு இருவரும் தூங்க சென்றுவிட்டனர். அதிகாலையில் விஜயலட்சுமி எழுந்தபோது கதிர்வேல் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார்.
உயிருடன் இருந்தால்தானே சொத்தை மருமகளுக்கு எழுதி வைப்பார். அவளை சந்திக்க செல்வார் என்று கருதிய விஜயலட்சுமி, வீட்டில் உள்ள அரிவாளை எடுத்து வந்து, தூங்கிக்கொண்டு இருந்த கதிர்வேல் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
ரத்தவெள்ளத்தில் துடித்த கதிர்வேல் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதன்பிறகு அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி, கணவரை உடலை பார்த்து கதறியுள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி கிடைத்த தகவல் அடிப்படையில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி குமரவேல், பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
கதிர்வேல் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், விஜயலட்சுமியை கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
மருமகளுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவரை மனைவி வெட்டிக்கொலை செய்திருப்பது கன்னிகைப்பேர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.