மத்தியப் பிரதேச மாநிலம், மந்த்சாவூர் நகர் ரெயில் நிலையத்தில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வந்த தகவலை அடுத்து, முஸ்லிம் பெண்கள் இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையறிந்து, அந்த இடத்திற்கு வந்த இந்து அமைப்பைச் சேர்ந்த பெண்கள், காவல்துறையினரின் முன்னிலையிலேயே முஸ்லிம் பெண்களை கடுமையாகத் தாக்கினர்.
பின்னர் அந்தக் கும்பலிடமிருந்து அவர்களை மீட்டு, காவல்நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்தனர். அந்தப் பெண்கள் இருவரும் 30 கிலோ மாட்டிறைச்சி வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள அம்மாநில உள்துறை மந்திரி “அந்த இரு பெண்களும் வைத்திருந்த இறைச்சி, எருமை மாட்டின் இறைச்சி என அதனை ஆய்வு செய்த கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இரு பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் எருமை மாட்டு இறைச்சிக்கு தடையில்லை. ஆனால் எருமை இறைச்சியை விற்பனை செய்ய முறையான அனுமதி பெற வேண்டும்.
தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் இருவரும் அனுமதி சீட்டு வைத்திருக்கவில்லை. எனவே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரம் இன்று மாநிலங்களவையில் எதிரொலித்தது.
இதுதொடர்பான விவாதத்தின்போது உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மத்திய பிரதேச சம்பவத்திற்கு பா.ஜ.க.வை கடுமையாக சாடினார் மாயாவதி. மாட்டிறைச்சி விவகாரம் மூலம் தலித்துகளையும், முஸ்லிம்களையும் குறிவைப்பதாக குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டினார்.