அம்பாறை மாவட்டம் உஹண கோணாகொல்ல பகுதியில் உள்ள சேனரத்புர பிராந்திய வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் நான்கு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் உஹன பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உஹண பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றின் மாணவிகள் நால்வர் இன்று செவ்வாய்க்கிழமை(7) இடம்பெறவிருந்த ஒரு போட்டியில் கலந்துகொள்வதற்காக மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளனர். குறித்த விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க சென்ற நான்கு சிறுமிகளே இவ்வாறு வைத்தியரினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் சக மாணவர்களிடம் தெரிவித்த பின்னர் வகுப்பாசிரியரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனை அடுத்து வைத்தியச் சான்றிதழ் வழங்குவது எனும் போர்வையில் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் நடந்துகொண்ட வைத்தியர் கைது செய்யப்பட்டதாக உஹன பொலிஸார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட 18, 17, 14 வயதுடைய 04 சிறுமிகள் முறைப்பாடு வழங்கியதை அடுத்து பொலிசார் உடனடியாக வைத்தியரை கைது செய்து தடுப்பு காவலில் வைத்து விசாரித்த நிலையில் குறித்த வைத்தியரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட வைத்தியரை எதிர்த்து அப்பகுதியில் வசிப்பவர்கள் வைத்தியசாலையில் ஒன்று கூடியமையினால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வைத்திய பரிசோதனைகளுக்காக பாதிக்கப்பட்ட மாணவிகள் அம்பாறை பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.