கர்னல்: ஹரியானாவில் ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவ, மாணவிகளை கண்மூடித்தனமாக அடித்தபோது எடுத்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் நகரில் தனியார் ஆங்கில பயிற்சி பள்ளி நடத்தி வருபவர் பிரதீப் அரோரா. அவர் தனது பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் வீட்டுப்பாடம் முடிக்காதது, தாமதமாக வருவது உள்ளிட்ட காரணங்களுக்காக அவர்களை ஈவு, இரக்கமின்றி கண்மூடித்தனமாக அடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் வகுப்பறையில் மாணவிகளின் முடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்து, காதை பிடித்து இழுத்து அடித்தது மற்றும் மாணவர்களை கட்டையால் கையில் அடித்தது ஆகியவற்றை மாணவர் ஒருவர் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து உள்ளூர் செய்தி தொலைக்காட்சி சேனலிடம் அளித்துவிட்டார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை பார்த்த போலீசார் அரோரா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரோரா மாணவ, மாணவியரை அடிப்பது குறித்து யாரும் புகார் அளிக்காமலேயே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மாணவ, மாணவியர் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை அடிப்பதாக அரோரா தெரிவித்துள்ளார்.