கோவை துடியலூர் அருகே மாயமான சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூரை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது 7 வயதான மூத்த மகள் திப்பனூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற அந்த சிறுமி நேற்று மாலை வீட்டுக்கு திரும்பி வரவில்லை. பெற்றோர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், உதவி ஆய்வாளர் பூபதி தலைமையிலான காவல்துறையினர் மாயமான சிறுமியை தேடி வந்தனர். ஆனால், கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வீட்டு அருகே உள்ள காலியிடத்தில் மாயமான சிறுமி துணியால் மூடப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தடாகம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தன. மாயமான சிறுமி பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. அப்போது சிறுமியின் கை, கால் கட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீஸார் அதை உறுதிப்படுத்தவில்லை.
இதுகுறித்து தடாகம் காவல்துறையினர் கூறும்போது, “சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அச்சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை முடிவிலேயே தெரியவரும். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது”, என்றனர்.