வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று தனித்து போட்டியிடும் வகையில் கூட்டமைப்புக்கு சவாலாக மாற்று அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இரகசிய காய் நகர்த்தல்களில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது.
இந்நிலையில் விக்னேஸ்வரன் அவ்வாறு தனியாக பிரிந்து செல்ல இடமளிக்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியன கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனிடம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் தெரியவருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டிருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதன் பின்னரான காலப்பகுதியில் கொள்கைரீதியாக கூட்டமைப்புக்கும் தனக்கும் வேறுபாடுகள் இருப்பதாக பகிரங்கமாக த் தெரிவித்திருந்தார் .
அதன் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைகளை முன்வைத்து தேர்தலில் கூட்டமைப்பு வாக்குக்கோரியதன் அடிப்படையில் தான் பயணம் செய்வதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்ததோடு தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பினையும் உருவாக்கினார்.
அதனைத் தொடர்ந்து தமிழரசுக்கட்சியின் தலைமையுடன் முரண்படும் நிலைமைக்கும் தள்ளப்பட்டார்
இதேவேளை மாகாண சபைகளுக்கான தேர்தல் இவ்வருட இறுதிக்குள் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் அது குறித்த விய+ங்களை வகுக்க ஆரம்பித்துள்ளன.
அதன் பிரகாரம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அடுத்த தேர்தலில் தான் போட்டியிடுவேன் என்பதை மட்டுமே அறிவித்துள்ள போதும் கூட்டமைப்பிலா அல்லது தனித்தா என்பது குறித்து தெளிவாக எதனையும் கூறமுடியாது.
தொடர்ச்சியாக மௌனம் காத்து வருகின்றார். எனினும் அண்மைய நாட்களில் தனிக் கட்சியொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சில நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன..
புளொட் அமைப்பினைச் சார்ந்தவர்களிடத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியொன்று காணப்படுகின்றது.
ஆரம்பத்தில் அக்கட்சியை பயன்படுத்துவது தொடர்பில் விக்னேஸ்வரன் கரிசனை கொண்டிருந்தாலும் புளொட் அமைப்பு இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இருப்பதால் மேற்படி அரசியல் கட்சியை பயன்படுத்துவது குறித்து தீர்க்கமான முடிவொன்றை விக்னேஸ்வரனால் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பில் நகர்வுகளை செய்து வரும் விக்னேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தாலும் அதனை உடனடியாக பதிவு செய்து மாகாண சபைத் தேர்தல் களத்திற்கு தயார் படுத்த முடியாத நிலைமைகள் காணப்படுவதால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலைப் பெற்றுக்கொண்டு அக்கட்சிகளுக்கான உரித்துக்களை கொண்டிருப்பவர்களை அறிந்து அவர்களிடத்திலிருந்து கட்சியை பெறுவதற்கான முனைப்புக்களை தனக்கு நெருங்கிய மாகாண சபை உறுப்பினர்கள் ஊடாக முன்னெடுத்து வருவதாக அறிய முடிகிறது.
அதேநேரம் கொள்கை ரீதியாக ஒருமித்து பயணிக்கக் கூடிய அரசியல் கட்சிகளையும் அழைத்து கூட்டணியாக எதிர்காலத்தில் எவ்வாறான நகர்வுகள் முன்னெடுப்பது என்பது குறித்த பேச்சுக்களை இரகசியமாக முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அப்பேச்சுக்களில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்காத போதும் உங்களின் (விக்னேஸ்வரன்) தலைமையின் கீழான கூட்டணியில் பங்கெடுப்போம் என்ற உறுதியளிப்பு குறித்த தரப்பினரால் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
முன்னதாகவே கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறிய தரப்பினரும் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் கூட்டணியொன்று அமைந்தால் அதனை வரவேற்பதோடு பங்கெடுப்பதற்கு தயாராகவே இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா கூட்டமைப்பின் சார்பில் தன்னை வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில் களமிறங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் கடந்த முறை இழைத்த தவறை இம்முறை இழைப்பதற்கு தயாரில்லை என்றும் அறிவித்துள்ள நிலையில் தமிழித் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகவுள்ள ரெலோ மற்றும் புளொட் ஆகியன கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனிடத்தில் இவ்விடயம் குறித்த தமது நிலைப்பாடுகளைப் பகிர்ந்துள்ளன.
குறிப்பாக புளொட் தலைவர் சித்தார்த்தன் எம்.பி, மற்றும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி ஆகியோர், விக்னேஸ்வரன் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனியாக போட்டியிடுவதானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டுமல்ல தமிழ் மக்களையும் பலவீனப்படுத்துவதாக அமையும்.
மேலும் மாகாண சபைத் தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்பட்டு புதிய முறையில் தேர்தல் நடைபெற்றால் விக்கினேஸ்வரனின் பிளவால் எந்தவொரு தரப்பினருக்கும் ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளதுடன் விக்கினேஸ்வரனுடன் பரஸ்பர பேச்சுக்களை நடத்தி இயலுமானவரையில் அவருடைய பிளவைத் தடுப்பதோடு வலுவான தமிழ்த் தேசிய தரப்பாக தேர்தலுக்கு முகங்கொடுப்பதே சிறந்தது என்று தமது கருத்துக்களை சம்பந்தனிடத்தில் முன்வைத்துள்ளனர்.
இவை அனைத்தையும் சம்பந்தன் செவிமடுத்தபோதும் அவர் தரப்பிலிருந்து தீர்க்கமான கருத்துக்கள் எவையும் பிரஸ்தாபிக்கப்படவில்லை என அறிய முடிகின்றது.