பளை போக்குவரத்து பொலிஸாரின் வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு, பளை பகுதியில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் இராணுவம் குவிப்பு மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகின்றது.
பளை கச்சார் வெளி சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பளை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு போக்குவரத்துப் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த நேரம் கச்சார் சந்திக் கிராம பக்கமாக சந்தேகத்திற்கிடமான சத்தம் கேட்ட போது போக்குவரத்து பொலிஸார் டோர்ச் லைட் ஒளி மூலம் அவதானித்துள்ளனர்.
இனந்தெரியாத நபர் ஒருவர் ரி-56 ரக துப்பாக்கியால் நான்கு தடவைகள் பொலிஸார் மீது சூடு நடத்தி விட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதிலுக்கு பொலிஸாரும் சூடு நடத்தியுள்ளனர். எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
தோட்டாக்கள் அனைத்தும் புகையிரதத்திற்கான சமிஞ்ஞை கட்டுப்பாட்டு பெட்டியை துளைத்துள்ள போதிலும் பொலிஸாரின் வாகத்தின் மீது ஒரு தோட்டாக்கள் மட்டுமே பாய்ந்துள்ளன.
ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் மக்களுக்கு அறிவித்தல் கொடுத்துள்ளனர். வீடுகளை விட்டு வெளியேற வேண்டாமென அறிவித்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தினைத் தொடர்ந்து அந்தப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். புகையிரத கடவை மற்றும் கச்சார்வெளி சந்திப் பகுதியில் பளை பொலிஸார் குவிக்கப்பட்டும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறிப்படவில்லை. இருந்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.