தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியில் கலேவல – யட்டிகல்பொத்த சந்திக்கு அருகே நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகிய நால்வர் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை 5.30 மணிக்கும் 6.00 மணிக்கும் இடைப்பட்டநேரத்தில் முச்சக்கர வண்டியொன்றும்
லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் இதன்போதே இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தனகல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதான வடு ஆரச்சிகே ரணசிங்க எனும் தந்தை, 42 வயதான ஜயலத் நில்மினி வெல் அரம்பே எனும் தாய் அவர்களது 20 வயதான வடு ஆரச்சிகே திலந்த ஷெஹான் ரணசிங்க, 8 வயது மகள் வடு ஆரச்சிகே உமாஷா நில்மினி ஆகியோரே பரிதாபகரமாக உயிரிழந்தவர்களாவர்.
கந்தளாய் பகுதியில் இருந்து மேற்படி நால்வரும் தமது முச்சக்கர வண்டியில் அத்தனகல்லையில் உள்ள தமது இருப்பிடம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நோக்கி வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே விபத்து சம்பவித்துள்ளது.
உயிரிழந்த குடும்பத்தார் கந்தளாய் பகுதியில் வர்த்தக நடவடிக்கையொன்றில் ஈடுபட்டுவிட்டு பின்னர் வீடு நோக்கி திரும்பியுள்ளதாகவும், இதன்போது 20 வயதான மகனே முச்சக்கர வண்டியை செலுத்தியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முச்சக்கர வண்டியை செலுத்திய மகனுக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கத்தால் இந்த விபத்து சம்பவித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும் விபத்தையடுத்து லொரியின் சாரதியை கலேவல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்தையடுத்து பிரதேச வாசிகள் முச்சக்கர வண்டியில் பயணித்த நலவரையும் கலேவல வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றிருந்த போதும் அவர்கள் அங்கு வைத்து உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த ஒருவரின் சடலம் கலேவலை வைத்தியசாலையிலும் ஏனைய மூவரின் சடலங்களும் தம்புள்ளை வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை கலேவல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.