ராகுலுடன் பேசிவிட்டு தாமதமாக வீட்டுக்கு சென்றதால் பெண் கொலை
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேசி வருகிறார்.
கடந்த புதன்கிழமை அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஜோர்கட் நகரில் நடந்த 600 பெண்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பெண்களுக்கு மத்தியில் அமர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2 பெண்கள் ராகுலை நெருங்கி அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டனர். அந்த காட்சி படத்துடன் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் பெகஜன் பஞ்சாயத்து உறுப்பினரான போன்டி சுடியா என்ற பெண் நேற்று முன்தினம் இரவு அவரது கணவர் சோ மேஸ்வரால் தீ வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டார். அவர் காங்கிரஸ் கட்சியில் மகளிர் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர் ஆவார்.
போன்டி சுடியா படுகொலை நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்தான் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்தவர் என்றும், அந்த கோபத்தில் தான் அவர் கணவர் சோமேஸ்வர், உயிரோடு தன் மனைவியை எரித்து கொன்று விட்டார் என்றும் தகவல்கள் வெளியானது.
சிறிது நேரத்தில் இந்த பரபரப்பு தகவலை அசாம் மாநில பொலிசார் மறுத்தனர். சோமேஸ்வரனும் 40 சதவீத தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெற்ற பிறகே உண்மையான தகவல்கள் தெரிய வரும் என்று கூறினார்கள்.
இந்த நிலையில் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட போன்டி சுடியா ராகுல்காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று தெரிய வந்துள்ளது. ராகுலுடன் உரையாட அரங்கில் அமர்ந்திருந்த 600 பெண்களில் அவரும் ஒருவராவார்.
ராகுல்காந்தியுடன் பேசி விட்டு இரவு வீட்டுக்கு தாமதமாக வந்ததால் அவருக்கும், அவரது கணவர் சோமேஸ்வரருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் போன்டி கொல்லப்பட்டதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே காங்கிரசின் புகழை கெடுக்கவே ராகுலுக்கு முத்தமிட்டவர் கொலை செய்யப்பட்டதாக சிலர் சதி திட்டம் தீட்டி செய்தி பரப்பி விட்டதாக அசாம் மாநில முதலமைச்சர் தருண் கோகேய் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:–
எரித்து கொலை செய்யப்பட்ட போன்டிக்கும், ராகுல் காந்தி பங்கேற்ற கூட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராகுலுடன் அரங்கில் இருந்த 600 பெண்களில் கூட ஒருவராக போன்டி இருக்கவில்லை.
ராகுல் கூட்ட அரங்குக்கு வெளியில் அவரைப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு நின்றனர். அவர்களில் ஒருவராகத்தான் போன்டி இருந்தார். மற்றபடி அவர் கொலைக்கும் ராகுல் நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வா அசாம் முதலமைச்சர் தருண் கோகேய் கூறினார்.